Monday, December 25, 2006

48. ஆறாறா முப்பத்தாறு

சைவ சித்தாந்தத்தின் மூலப் பொருளை உரைக்கும் பாடல் இது. மிகவும் தத்துவச் செறிவு மிக்கது. முடிந்த அளவிற்கு எளிமையாக விளக்கிச் சொல்கிறேன்.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சூரா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே


ஆறாறையும் நீத்து - ஆறு X ஆறு = முப்பத்தாறு. முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி அதற்கும் மேலான நிலையை அடைவது என்பது சிவாகமத்தில் மிகவும் உயர்ந்த நிலை. அந்த நிலையை அந்த உயர்ந்த நிலையை அருணகிரிக்கு முருகப் பெருமான் அளித்தார். சரி. அதென்ன முப்பத்தாறு தத்துவங்கள்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த முப்பத்தாறையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஆன்ம தத்துவங்கள், வித்யா தத்துவங்கள் மற்றும் சிவதத்துவங்கள்.

ஆன்ம தத்துவங்கள்: (24)

பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு - 5
சூட்சும பூதங்கள் - ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
ஐம்பொறிகள் - கண், வாய், செவி, மூக்கு, மெய் - 5
செயலுறுப்புகள் - கை, கால், நாக்கு, குதம், குறி - 5 (இவை உடலியக்கத்திற்கு ஆனவை )
உட்கரணங்கள் - மனம், குணம், அறிவு, அகங்காரம் - 4 (மனம் வேறு. குணம் வேறு. அறிவு வேறு. அறிவு நல்லதையும் அறியும். தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானால் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதைச் செய்கிறார்கள் அல்லவா. அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது போக வேண்டும்.)

ஆக ஆன்ம தத்துவங்கள் மொத்தம் இருபத்தி நான்கு. பஞ்சபூதங்கள் ஸ்தூல பூதங்கள் எனப்படும். அதவது ஒரு உருவமுள்ளவை. சூட்சும பூதங்கள் உருவமற்றவை. ஆனால் உணர முடியும். எடுத்துக்காட்டாக நெருப்பு என்ற ஸ்தூல பூதத்திற்குள் ஒளிந்திருப்பது ஒளி என்ற சூட்சும பூதம். இந்த சூட்சும பூதங்கள் ஐம்பொறிகளால் உணரப் படுகின்றன. அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தத்துவங்கள். ஐம்பொறிகளுக்கு உணரும் வேலை. செயலுறுப்புகளுக்குச் செய்யும் வேலை. கை செய்கிறது. கால் நடக்கிறது. நாக்கு பேசுகிறது. குதம் மலத்தை வெளியேற்றுகிறது. குறி இன்பம் துய்க்கிறது.

வித்யா தத்துவங்கள்: (7)
காலம், நியதி, காலை, விதை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி

சிவ தத்துவங்கள்: (5)
மொத்தம் ஐந்து சிவ தத்துவங்கள். இவை சிவபக்தித் தத்துவங்கள். சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள் இந்த ஐந்தும்.
சுத்த வித்தை : அறிவு குறைவாக இருந்து செயல் நிறைய இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.
ஈசுவரம் : அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருவது உண்மைதானே.
சாதாக்கியம் : சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
விந்து : இது சக்தியின் வடிவம்.
நாதம் : இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

இப்பொழுது புரிந்திருக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அவற்றின் பண்புகளும். ஆனால் முருகப் பெருமானின் தனிக்கருணை இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது. "ஆறாறையும் நீத்து" - முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கும் மேலான நிலையே கந்தரநுபூதி. அதாவது சிவாநுபூதிக்கும் ஒரு படி மேலே.

இதனால் சிவாநுபூதி குறைந்தது என்று பொருள் அல்ல. சிவாநுபூதி என்பது அளவை. அதனால் அளந்த உயர்ந்த பொருள் கந்தரநுபூதி.

சீறி வந்த சூரனை வெற்றி கொண்டு அதனால் கூறாகக் கிடந்த இந்திரலோகத்தில் அருள்மழை பொழிந்து குளிர வைத்தவனே! முப்பத்தாறு தத்துவங்களையும் தாண்டி அவைகளுக்கும் மேலான கந்தரநுபூதியைப் பேறாக பெறவேண்டியதும் உன் கருணையே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

47. ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்தது

பொதுவாக அனைவருக்கும் தெரியாத ஒரு பெயர்க்காரணத்தை இப்பொழுது சொல்லப் போகிறேன். கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். ஓங்காரம் என்பது அகர உகர மகாரங்களின் சேர்க்கை.
அ + உ + ம = ஓம்
இந்த மூன்று எழுத்துகளில் அகரம் எந்த மொழியிலும் முதலெழுத்தாக வரும். ஆகையால் முத்தொழில்களிலும் முதற்தொழிலாகிய படைப்பைக் குறிக்கிறது. உகரமானது காத்தல் தொழிலைக் குறிக்கிறது. பெரும்பாலும் தமிழிலக்கிய நூல்கள் உகரத்தில்தான் தொடங்கும்.
"உலகம் உவப்ப வலன் ஏர்பு" - திருமுருகாற்றுப்படை
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு" - பெரிய புராணம்
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" - கம்பராமாயணம்
"உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்" - வளையாபதி
மெய்யெழுத்துகளில் இறுதியில் வருவது மகரம். ஆகையால் அது முடிக்கும் அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

ஆகக் கூடி ஓங்காரமென்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்கள் கூடியது. சுருங்கச் சொல்லி விளக்கினால், ஓங்காரமென்பது உலக இயக்கம். Big Bang Theory என்று சொல்கின்றார்களே. ஒன்றுமில்லாமலிருந்து எல்லாம் வந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் ஓங்காரம்.

ஓங்காரம் என்பது இரைச்சலும் அமைதியும் கலந்தது. சங்கை காதில் வைத்தால் ஓங்காரம் கேட்கிறதல்லவா. சங்குக்குள்ளே அமைதி. வெளியே இரைச்சல் இரண்டும் கலந்தது ஓங்காரம். திருச்செந்தூர் கோயில் மதிற்சுவற்றில் ஒரு பொந்து உண்டு. அதில் காதை வைத்தால் ஓங்காரம் கேட்கும். கோயிலுக்குளிருக்கும் தெய்வீக அமைதியும் வெளியே இருக்கும் அலைகடலில் ஓசையும் கூடி ஓங்காரம் அங்கு பிறக்கிறது.

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். நல்ல அருள் கிடைக்கும். எப்படி என்று கேட்கின்றவர்களுக்கு ஒரு அறிவியல் விளக்கம். எதிரெதிர் வெப்பநிலை கூடினால் மின்சாரம் உண்டாகிறது. ஒரு தாமிரக் கம்பியின் ஒரு முனையை பனிக்கட்டியிலும் மறுமுனையை கொதிநீரிலும் வைத்தால் அந்தக் கம்பியில் மின்னோட்டம் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. அந்த மின்சாரத்தால் நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம். அது போலத்தான் இரைச்சலும் அமைதியும் கூடிய ஓங்காரமும் சக்தி உடையது.

இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
அன்னைக்கு அல்லவா பெயர் வைக்கப்படுகிறது. தாயுள்ளம் கருணையுள்ளம். எதையும் காக்கும் கருணை. அதனால் காத்தலுக்கு உரிய உகரம் முதலில் நிற்கிறது. எப்படிக் காப்பது? துன்பத்தை அழித்துதானே! அதற்காக முடித்தலுக்குரிய மகரம் அடுத்து நிற்கிறது. அடுத்தது? அகரம். அது படைப்பு. நல்ல வாழ்க்கையை நமக்குப் படைக்கின்றவள் அல்லவா.

இத்தனை பெருமை உமை என்ற அந்தப் பெயருக்கு. அந்த உமையின் மகனே என்று முருகனைப் புகழ்கிறார். உமையை விட முருகு என்ற பெயர் இன்னமும் சிறந்தது. எப்படி தெரியுமா? முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.

ஆகையால் அந்த முருகன் நமக்குத் தாயும் தந்தையும் போன்றவன். அதுதான் இந்தப் பாடலின் முதலடி. "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ". முதலில் தாய். பிறகு தந்தை. தாய் சொல்லித்தானே தந்தையே தெரியும்.
"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
" - புறநாநூறு
இங்கே புறந்தருதல் என்பது பெற்றுப் போடுதல் அல்ல. ஒரு நல்ல குழந்தையை உலகிற்கு கொடுப்பது. அது அன்னையால்தான் முடியும். அதனால்தான் முருகனை "உமையாள் மைந்தா" என்று இந்தப் பாடலில் அருணகிரியார் கூறுகிறார்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே


நிராகுலம் என்ற பதத்தை விளக்கும் பொழுது முன்பே சொன்னதுதான். இப்பொழுதும் சொல்கிறேன். ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள். நமக்கெல்லாம் இரண்டு வகையான துன்பங்கள் வரும். உள்ளத்தை வருத்தும் அகத்துன்பம். உடலை வருத்தும் புறத்துன்பம். இவை இரண்டு தவிர்த்து வேறு ஏதாவது துன்பம் இருக்கிறதா? எத்தனையெத்தனை துன்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.

இப்படி நமது சிந்தையை வருத்துகின்ற துன்பங்களையெல்லாம் துடைத்து தாயும் தந்தையுமாக காக்க வேண்டுமென்று நமக்காக அருணகிரியார் இந்தப் பாடலில் வேண்டுகிறார்.

"கந்தா! கதிர்வேலவனே! உமையம்மை பாலா! குமரா! மறைகளுக்கு எல்லாம் தலைவனே! சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள் அனைத்தையும் துடைத்து காப்பாற்றும் நீயே தாயும் தந்தையுமானவன்!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 11, 2006

46. கற்கை நன்றே கற்கை நன்றே

நாம் ஒன்றைக் கற்க வேண்டுமென்றால் நல்ல ஆசிரியரைத் தேட வேண்டும். பொல்லாத ஆசிரியரிடம் கற்றாலும் கற்ற கல்வி பயன் தராது.

மாவீரன் கர்ணன். பரசுராமரிடம் போய் கல்வி கற்றான். பிறப்பறியாதவன் அவன். எந்தக் குலத்தைச் சொல்வான்? பரசுராமரும் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லாக் கலைகளையும் கற்பித்தார். கர்ணனும் நல்ல மாணவன். அனைத்தையும் நெறியோடு கற்றான். விதி யாரை விட்டது?

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வண்டு கர்ணனின் தொடைக் கடித்துத் துளைத்தது. ஆசானின் தூக்கம் கலைந்து விடுமே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ஆனால் தொடையிலிருந்து பெருகிய குருதி பரசுராமரை எழுப்பி விட்டது.

இவ்வளவு வலியைத் தாங்க வல்லவன் குலத்தால் சத்திரியனாக இருப்பான் என்று சொல்லி சபித்து விட்டார். எப்படி? கற்ற கல்வி உற்ற நேரத்தில் அற்றுப் போகச் சபித்தார். அதனால் போர்க்களத்தில் சரியான நேரத்தில் வித்தையை மறந்தான் கர்ணன். அதனால் வீழ்ந்தான்.

கற்பதும் நல்லவர்களிடமே கற்க வேண்டும். அப்பொழுதுதான் முழுப் பயன் கிடைக்கும். எதையும் நல்வழியில் செய்ய வேண்டும். ஏகலைவனைப் பாருங்கள். துரோணரை மனதளவில் குருவாக வைத்து வில் வித்தை பயின்றான். விளைவு? கைக்கட்டை விரலை இழந்தான். நல்ல ஆசான் கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும்.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்.

எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அரவணைத்துச் சொல்லிக் கொடுப்பார்களா? சிலர் முரடர். சிலர் முசுடர். சிலர் அசடர். இருந்தும் என்ன? நமக்கு வேலை ஆகிறதே.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
- புறனானூறு
அதாவது, கொடு என்று கேட்பது இழிந்ததாம். அப்படிக் கொடு என்று கேட்ட பின்னும் ஒருவர் கொடேன் என்று சொன்னால் அது இன்னமும் இழிந்ததாம். அப்படி நாம் கேட்டு ஒருவர் இல்லையென்று சொன்னால் நமக்கு எவ்வளவு அவமானம். அருணகிரி மானத்திற்கு அஞ்சியர். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்கிறது குறள். நாமும் மானத்திற்கு பயப்பட வேண்டும்.

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே


கரவாகிய கல்வியுளார் - நான்கு பேருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாத கற்றவர்கள். அவர்களிடம் சென்று இரவா வகை வேண்டும். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டா என்கிறார் ஔவை. அப்படி மதிக்காதவரிடம் கையேந்தி நிற்க வைக்காமல் தானாக வந்து அருளினான் முருகன். இப்பொழுது முதலிரண்டு வரிகளைப் படியுங்கள். நன்றாகப் புரியும்.
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ

அடுத்த இரண்டு வரிகளைப் பார்க்கலாம்.
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கந்தரநுபூதியில் கடவுள் வாழ்த்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்திரண்டு பாடல்கள். இந்தப் பாடல்களில் ஆங்காங்கே வள்ளிநாச்சியாரைப் பற்றி வரும்.

பணியா என வள்ளி பதம் பணியும்....
வேடர் குலப்பிடி தோய்........
தூசா மணியும் துகிலும் புணைவாள் நேசா...

ஆனால் தெய்வயானை அம்மையாரைப் பற்றி இந்த ஒரு பாடலில்தான் வருகிறது. அதுகூட மறைபொருளாக. குஞ்சரவா என்று முருகனை அழைப்பதனால் தெய்வயானையைப் பற்றிச் சொல்கிறார்.

குஞ்சரம் என்றால் ஆனை. மாபாரதக் கதையில் தருமன் "அஸ்வத்தாமா ஹதகா குஞ்சரகா" என்று பொய்யுரைத்தான். "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன்" என்று சொல்லி சிறிய இடைவெளிக்குப் பிறகு "என்ற ஆனை" என்றார். முழுவதும் கேட்டால் "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன் என்ற ஆனை" என்று வரும். அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன். தன்னுடைய மகன் இறந்து விட்டான் என்று எண்ணி மருகி துரோரணர் போர்க்களத்திலேயே தவத்தில் அமர்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து திரௌபதியின் அண்ணன் திட்டத்தும்மன் துரோணரின் கழுத்தை அறுத்து விட்டான்.

குஞ்சரவா என்றால் தெய்வயானையை மணந்தவன் என்று பொருள். குரவா-என்றால் அறிவு மிகுந்தவன் என்று பொருள். குறவா என்றால் மலைக்குறவர். குலிசாயுதம் என்றால் எவரையும் வெல்லும் ஆயுதம். எது அது? ஞானம்தான் எதையும் வெல்லும் ஆயுதம். சிவயோகத்தை கொடுக்க வல்லவர் சிவன். ஆனால் சிவயோக தயாபரனே என்று முருகனைச் சொல்கிறார். எப்படி? தகப்பனார் சொத்து மகனுக்கு வருவது போலத்தான் இதுவும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 04, 2006

45. தலை மேல் வைத்துக் கொண்டாடி

ஒருவர் மிகவும் துன்பத்திலிருந்தார். பெரும் பசி. வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. வீட்டிலும் அனைவருக்கும் துன்பம். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் புரியவில்லை.

தெய்வாதீனமாக ஒருவர் உதவினார். முதலில் எல்லாரும் சாப்பாடு போட்டு....துணிமணி கொடுத்து.....பிறகு ஒரு வேலையும் கொடுத்தார். தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் ஒரு நிலைக்கு வந்தது. உதவி பெற்றவர் நல்லவர். செய்நன்றி மறவாத உத்தமர். என்ன செய்வார்? உதவி செய்தவரைப் புகழ்ந்து பேசுவார். அவரால்தான் வாழ்வு வந்தது என்பதைத் தயங்காமல் சொல்லுவார்.

இப்படி அவர் பேசுவதையும் சொல்வதையுங் கண்டு மற்றவர்கள் கேலி பேசினார்கள். "பாரிவனை. முதலாளியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறான்!" என்று முதுகுக்குப் பின் கிண்டலடித்தார்கள். அவன் கண்டுகொள்ளவேயில்லை. நேர்மையாக உழைத்து வந்தான்.

நன்றி மறக்கக் கூடாது. உதவி செய்தவரைக் கொண்டாட வேண்டும். அதுவும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட வேண்டும். அதைத்தான் அருணகிரியும் செய்தார்.

எதைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்? சாடும் தனிவேல் முருகன் சரணம். அப்படியென்றால்? நமக்கு எந்தத் திக்கிலிருந்து துன்பம் வருமென்று தெரியாது. ஆனாலும் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் துன்பம் வந்து விடுகிறது. அந்தத் துன்பங்களைச் சாடுகின்ற தனிவேல் முருகனுடைய சரணங்களை, அதாவது திருவடிகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனலும் கமழும் கழலே


"தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ!" முருகனுடைய திருவடிகளை நாம் நினைப்பதற்கான கருணையும் முருகன் தந்ததே. நாம் மிகவும் மதிக்கும் ஒருவரின் கையெழுத்து வேண்டும். அதை நாமாக அடைய முடியுமா? அவருடைய அனுமதியின்றி சம்மதமின்றி கையெழுத்தைப் பெற முடியுமா? அது போலத்தான் இறைவனை வழிபடுவதற்கும் அவனது கருணை வேண்டும்.

அப்படித்தான் தலைமேல் திருவடிகளை வைத்துக் கொண்டாட கருணை செய்த முருகனுடைய அன்பைச் சொற்களில் அடக்க முடியாமல் திண்டாடுகிறார் அருணகிரி. "சூடும்படி தந்தது சொல்லுமதோ!" எப்படிச் சொல்வது? ஆனாலும் சொல்ல வேண்டும் என்பதால் இப்படிச் சொல்கிறார்.

ஒரு பட்டிக்காட்டுத் தாயார். காட்டிலும் மேட்டிலும் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றினார். பிள்ளைகள் பெரிதாயின. படுத்திருக்கும் தாயாரின் கால்களைப் படித்து விடுகிறான் மூத்த மகன். காய்ந்து கிடக்கும் தாயாரின் கால்களைப் பார்த்து கண்ணீர் வருகிறது. "ஐயோ! அம்மா! காட்டிலும் மேட்டிலும் நடந்தாயே! முள்ளும் கல்லும் உன் கால்களை எப்படிப் படுத்தியிருக்கின்றன. எங்களுக்காகச் செய்தாய். அப்படி எங்களுக்காக உழைத்த இந்தக் கால்களை பிடிப்பதற்க்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இந்தக் கருணையை நான் என்ன சொல்வேன்."

இங்கே அருணகிரி மகன். முருகன் தாயார். "வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனலும் கமழும் கழலே!" வீடு என்றால் வீடுபேறு. வீடுபேறு தரவல்லவது முருகன் திருவடி. சுரர் மாமுடி - தேவர்களுடைய மணிமுடிகள். சூரனைக் காப்பாற்றி அவனிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக தேவர்களின் மணிமுடியை முருகன் பாதத்தில் இட்டார்கள். அல்லது மணிமுடி இறைவன் திருவடிகளில் படுமாறு விழுந்து வணங்கினார்கள். வள்ளி நாச்சியாருக்கு அருள் செய்து அதன் வழியாக நமக்கு அருள் செய்ய காட்டிலும் மேட்டிலும் அருவிககரையும் நடந்தார் முருகன். "அருவித் துறையோடு இதனோடு திரிந்தவனே" என்று ஒரு பாடல் முன்னம் பார்த்தோம்.

இப்படி காட்டிலும் மேட்டிலும் நடந்து வள்ளி நாச்சியாருக்கு அருள்செய்ததும், நன்றியாக எப்பொழுதும் தேவர்கள் விழுந்து தொழுவதும், வீடுபேற்றைத் தரவல்லதுமான உனது திருவடிகள் எல்லாத் துயர்களையும் தீர்க்க வல்லவை. அந்தத் திருவடிகளை என் தலை மேல் வைத்துக் கொண்டாட கருணை செய்தாயே! அந்தக் கருணையை எப்படிச் சொல்வது?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 28, 2006

44. எதைத் தட்டினால் எது கிடைக்கும்

பொருட்காட்சிகளுக்குப் போகின்றவர்கள் பஞ்சு மிட்டாய் பார்த்திருப்பீர்கள். வாங்கியும் உண்டிருப்பீர்கள். அந்தப் பஞ்சு மிட்டாய் செய்வதைப் பார்ப்பதும் ஒரு அழகு. சுற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் சிறிதளவு நிறமூட்டப்பட்ட சர்க்கரையைப் போடுவார்கள். அந்த இயந்திரம் போட்ட சிறிதளவு சர்க்கரையைப் பகுத்து மெல்லிய பஞ்சுகளாக மெத்தென விரிக்கும். அதைக் குச்சியில் சுற்றி பெரிதாகத் தருவார்கள். அதை அப்படியே வாங்கி அமுக்கினால் மிகவும் சிறியதாகப் போய்விடும். ஆக சிறிய அளவு சர்க்கரைதான் பெரிய பஞ்சு மிட்டாயானது. அதே பெரிய பஞ்சுமிட்டாயை அமுக்கினால் சிறிய அளவுள்ள அடர்ந்த சர்க்கரைக் கட்டியாகிறது.

அது போலத்தான் கந்தரநுபூதியும். முதலில் அநுபூதிக்குத் தயாராக நாற்பது பாடல்கள் வரை சொல்கிறார் அருணகிரி. நாற்பது பாடல்களிலும் நமக்கு ஓரளவு அநுபூதியைப் பற்றித் தெரிந்து விடுகிறது. உடனே இந்தப் பாடலில் அநுபூதியைச் சொல்லி விடுகிறார். பிறகு பத்து பாடல்களில் அநுபூதியின் பெருமைச் சொல்லி விடுகிறார். விரிவாகச் சொல்லி விளங்க வைக்கிறார் செந்தமிழ் முனி.

தூசாமணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே


கந்தரநுபூதியில் மிகவும் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால், இந்தப் பாடலைச் சொல்லலாம். கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பத்து இரண்டு பாடல்கள். அந்த ஐம்பத்திரண்டு பாடல்களிலும் சொன்னதை இந்த ஒரு பாடலில் அடக்கி விட்டார் அருணகிரி நாதர்.

முதலில் அநுபூதி என்றால் என்ன? இறைவனோடு ஒன்று படுதல் என்று பொருள். சிவனோடு ஒன்றாகுதல் சிவாநுபூதி. சக்தியோடு ஒன்றாகுதல் சாக்தாநுபூதி. இகபர சுகம் வேண்டுவோர் சிவாநுபூதியும் சாக்தானுபூதியும் பெற வேண்டும். கலியுகத்தில் இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பட வேண்டாமென்று இகம் பரம் என்ற இரண்டு சுகங்களும் கந்தரநுபூதி வழியாக வடிவேலர் வழங்குகிறார். ஆங்கிலத்தில் Two-In-One என்று சொல்கிறார்களே. தொலைபேசவும் வேண்டும். புகைப்படம் பிடிக்கவும் வேண்டும். அதற்கு முன்பெல்லாம் இரண்டு கருவிகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது ஒரு கருவியிலேயே இரண்டையும் செய்ய முடிகிறதல்லவா. அது போலத்தான்.

சரி. கந்தரநுபூதி என்றால் என்னவென்று விளங்கிற்று. அது எப்படிக் கிடைக்கும்? மஞ்சளைப் பொடியாக்கினால் மஞ்சட் பொடி கிடைக்கும். அரிசியைப் பொடியாக்கினால் அரிசி மாவு கிடைக்கும். அது போல ஆசையென்னும் சங்கிலியைப் பொடியாக்கினால் கந்தரநுபூதி கிடைக்கும்.

"ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே!" நிகளமென்றால் சங்கிலி. "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்பது புத்த பெருமான் வாக்கும் கூட. ஆசை என்னும் சங்கிலி நம்மைப் பல துன்பங்களோடு இணைத்திருக்கிறது. அந்தச் சங்கிலிகள் அறுந்து விழுந்தால் இறைவனோடு ஒன்று பட முடியும்.

பெரும் யானையானாலும் சங்கிலியால் கட்டி விட்டால் நடக்க முடியுமா? நல்லவனாக இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் அநுபூதி கிட்டாது. நல்லவனாக இருந்த புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மண்ணுலகம் வர வேண்டும். அநுபூதி எய்தி விட்டால் இறைனோடு ஒன்றாக இருப்பதே தன்மை. அங்கே பேச்சு மூச்சு கிடையாது. நித்யானந்தம். அதாவது குன்றாத இன்பம். அதைத்தான் "பேசா அநுபூதி பிறந்தது" என்கிறார் அருணகிரி.

அநுபூதி எப்படிக் கிடைக்குமென்று தெரிந்தது. எதனால் கிடைக்கும்? அதையும் அருணகிரி சொல்லி விடுகிறார். மறைத்து வைக்க ஒன்றுமில்லை. "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே அந்த அன்பரது எண்ணம்.

தூசாமணி என்றால் தூசு இல்லாத மணி. மணியில் தூசு இருந்தால் ஒளி தெரியாது. தூசில்லாத மணியே ஒளிரும். அழுக்கான ஆடை அணிவது நன்றன்று. நீரிருக்குமானால் கந்தையானாலும் கசக்கிக் கட்ட வேண்டும். அப்படிக் குறையில்லாத மணிகளையும் தூய ஆடைகளையும் அணிந்த மலைக் குறத்தி வள்ளியின் நேசனான முருகனின் அன்பாலும் அருளாலும் மட்டுமே அநுபூதி கிட்டும். தமிழ்க் குறத்திகள் தூய ஆடை அணிகலன்களை அணிந்தவர்கள். குறிஞ்சி நிலத்தவர். இன்றைக்கு ஊருக்குள் காணும் குறத்தியர் தமிழ் பேசுகின்றவர்கள் கிடையாது. அது குறையன்று. அவர்கள் உண்மையான மலைக் குறவர்களன்று என்பதைச் சொல்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டுள்ளது.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 20, 2006

43. குறியைக் குறியாது

ஆத்திக-நாத்திக வாதங்கள் பல காலங்களாக இருந்து வருகிறது. எது தவறானது? எது சரியானது? இன்னமும் யாரும் பொது முடிவிற்கு வரமுடியவில்லை. நாத்திகர்கள் நாத்திகம் பேசுகின்றார்கள். ஆத்திகர்கள் ஆத்திகம் பேசுகிறார்கள். ஆனால் நமது தமிழ் மண்ணில் ஒரு பழுத்த ஆத்திகர் நாத்திகம் பேசியிருக்கிறார். அதுவும் நாத்திகர்கள் கூட பேச முடியாத அளவிற்கு.

அருணகிரியைத்தான் நான் சொல்கிறேன். மூச்சுக்கு முன்னூறு முறை முருகா முருகா என்று உருகிய அருணகிரிதான் முருகனைக் கும்பிட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் எது மெய்?
"ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் படருஞ் சுடர்
" என்கிறார்.

ஓல மறைகள்.....அதாவது இறைவனை ஓலமிட்டுத் தொழுகின்ற மறைகள். மறைகள் என்றால் வேதம். வேதம் என்றால் ரிக்கு, யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களா? அதை நான்மறைகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பாரே!

உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் மறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இறைவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி அனைத்து வேதங்களும் ஓலமிட்டுத் தொழுகின்ற இறையவன் யார்? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்". இதை எந்த மதத்தார் மறுப்பார்.

முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். சரி. துயில்மால் என்றால் வாடிகனில் எடுபடுமா? ஏசு என்றால் அரபு நாடுகளில் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லுங்கள். யார் மறுப்பர்.

இதுதான் உண்மையான நாத்திகம். இதைத் தமிழ் என்றோ பேசி விட்டது. இப்படிச் சில நடப்புகளும் பண்புகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கிலுள்ளன. மதங்களில் தெய்வங்களைக் குறிக்கும் முறைகளும் மாறுபடுகின்றன. சிலை வைப்பர் சிலர். ஏடு வைப்பர் சிலர். சிலையில்லை ஏடில்லை திசையென்பர் சிலர். எல்லாம் சரிதான். ஆனால் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொண்ட ஒன்று குறியீடு.

வேல் என்பது தமிழ்க் குறியீடு. வடக்கில் சூலாயுதமும் ஓங்காரமும். கிருத்துவர்களுக்குச் சிலுவைக் குறி. முகமதியர்களுக்கு பிறைச்சந்திரன். ஆக குறியீடு என்பது மதங்களுக்குப் பொதுவான பண்பாகக் காணப்படுகிறது.

தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது.

பத்து செங்கல் அடுக்கி வைத்திருக்கிறது. வலு இல்லாதவன் கையில் சுத்தியலை வைத்து உடைப்பான். வலு உள்ளவன் வெறுங்கையாலேயே உடைப்பான். ஆனால் எப்படி உடைத்தாலும் கல் உடையத்தான் செய்யும்.

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே


குறியை நினைத்துக் கொண்டு மனத்தை ஒடுக்குகின்றவர்கள் அந்தக் குறியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. அது முழுமையான ஒடுக்கமாகாது. ஒன்றையும் நினைக்காமல் மனம் ஒடுங்குவதே சிறந்தது.

இப்பொழுது முதல் வரியைப் படியுங்கள். "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை!" புரிகிறதா? எந்தக் குறியினையும் மனதில் குறியாது ஆனால் இறையருளைக் குறித்து அறியும் நெறியைத்தான் அருணகிரிநாதர் கேட்கிறார்.

அந்த நெறி எப்படிக் கிட்டும்? "குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்!". முருகா! உனதருளால் அல்லவா அது கிட்டும்.

அப்படி ஒரு நெறி தெரிந்தபின் அருணகிரியின் அநுபவம் என்ன? "செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே!"

இருப்பவை அனைத்தும் அற்று போகும் நிலை. அது அனைத்தையும் கடந்த நிலை. சச்சிதானந்த நிலை. சத்து+சித்து+ஆனந்தம் = சச்சிதானந்தம். உலகம் மறந்து போயிற்று. பேச்சில்லை. எண்ணமில்லை. அறிவிற்கும் அறியாமைக்கும் கூட அங்கு இடமில்லை. எல்லாம் மறந்த ஆனந்த நிலை.

பக்தியுடன்,
கோ.இராகவன

Monday, November 13, 2006

42. வீட்டை விட்டுத் துரத்தினால்

தந்தையார் வழியிலே பெருஞ் செல்வம் மகனுக்கு வந்தது. மகன் அதை வீணாடம்பரஞ் செய்தான். கொஞ்சமும் அறம் செய்யவில்லை. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது தமிழ் மூதாட்டி வாக்கு. கைக்காசு குறைந்தது. கடன் வாங்கினான். அதுவும் தீர்ந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வாசலில் அமீனா வந்து நின்றான். இதுவரை இருந்த இடம் காலாவதியாகி விட்டது என்ற நீதிமன்ற உத்தரவு வேறு. என்ன செய்வது? இருந்த வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும் இழுத்துப் போடும் அதிகாரம் வாசலில் நிற்பவனுக்கு இருக்கிறது.

கண்ணீர் விட்டு புலம்பினால் விட்டு விடுவானா? இத்தனை நாள் இருந்த வீடல்லவா. நம் விருப்பபடியெல்லாம் செய்யக் காரணமாயிருந்த வீட்டை விட்டுத் துரத்தினால் என்ன செய்வது? தெருவிலா நிற்பது? வேறு வீடு வேண்டுமே? அப்பொழுது நமக்கு வேண்டியவர் வந்து, அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எவ்வளவு நிம்மதி கிட்டும்!

இதுதான் வாழ்க்கைத் தத்துவம். தாய் தந்தையர் கொடுத்த வீடு இந்த உடம்பு. நமது விருப்பப்படியெல்லாம் வளைந்து கொடுத்து இன்பம் நுகர்ந்த உடல். விதி முடிந்து விட்டது. காலதூதன் வாயிலில் நிற்கிறான். பெருங்கலகம் செய்து இதுவரையிருந்த உடம்பை விட்டுத் துரத்தப் போகிறான். அப்போது எங்கே போவது? இன்னொரு வீடு (உடம்பு) கிடைக்குமா?

அருணகிரி அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "முருகா! எனக்குத் தெரியும். இந்த நமன் வந்து கலகம் செய்வான். என்னை உடலைவிட்டுத் துரத்த வருவான். வேறு போக்கிடம் ஏது? அப்பொழுது நீ வா. வந்து என்னைக் கா. இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞானோப தேசிகனே


நமன் கவர்ந்தால் வீடுபேறு கிட்டாது. இறைவனே வர வேண்டும். அப்பொழுதுதான் வீடுபேறு கிட்டும். பெரிய வீட்டிற்குப் போக முடியும். என்னுடைய கிருத்துவ நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். கிருத்துவ மதத்திலும் இதே கருத்து சொல்லப்படுகிறதாம். அதை salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். "கா கா நமனார் வரும் நாள்" என்கிறார் அருணகிரி. இரண்டு முறை கா கா என்கிறார். அவசரமாகக் கேட்டும் பொழுது "குடு குடு" என்போம். "பர பர" என்று இரட்டைக் கிளவியும் உண்டே. அந்த நேரத்தில் தாமதம் செய்யக் கூடாது. அவ்வளவு அவசரம். அதனால்தான் சீக்கிரம் வர வேண்டும் என்று இரண்டு முறை அழைக்கிறார்.

வாகாக மயில் மீது ஏறி வலம் வருகின்ற முருகா! யோகா! சிவஞானமே சிறந்தது. அதையும் சிவனுக்கே உபதேசித்த பெருந்தேவரே! உயிர் பிரியும் வேளையில் காலனிடத்தில் என்னை விட்டு விடாமல் நீயாக விரைந்து வந்து மெய் வீட்டை (உடம்பு எனும் வீடு) விட்டு என்னைப் பிரித்து மெய் வீட்டைத் (உண்மையான வீட்டை) தருவாயாக.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 06, 2006

41. மானைத் தேடி

வள்ளி திருமணம் என்பது மிகவும் தத்துவார்த்தமான சுவையான நிகழ்ச்சி. அதைப் படிப்பதும் கேட்பதும் பாடுவதும் இன்பம். வள்ளி திருமணம் சொற்பொழிவு செய்யாத சைவைப் பிரசங்கிகளே கிடையாது. வாரியார் சுவாமிகளாகட்டும் புலவர் கீரனாகட்டும் வள்ளி திருமணத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே தோன்றிய காதல் கதை என்பதும் கூடுதல் இனிமை. அதே நேரத்தில் அதில் பொதிந்து கிடக்கும் தத்துவப் பொருளை அறிய அறிய ஆனந்தம் பெருகும்.

"மானைக் கண்டதுண்டா? எனக்குச் சொந்தமான மான் இங்கே வந்துவிட்டது. அதைக் கண்டதுண்டா?" வேடனின் கேள்வி வள்ளிக்கு.

அதுவோ காடு. மானைக் கண்டதுண்டா என்று கேட்டால்? மான்கள்தான் ஆங்காங்கே ஓடுகின்றனவே. "அடையாளம் சொன்னால் தேடிப் பார்க்கலாம்." சுருக்கமான விடை வள்ளியிடமிருந்து. வேடனின் அழகும் வீரமுள்ள உருவமும் அமுதூறும் இனிய பேச்சும் அவனிடமிருந்து வரும் நறுமணமும் அணிந்திருக்கும் அழகான ஆடைகளும் அவளின் கவனத்தைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. அவள் மனதில் வேறொருவன் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறானே.

வேடன் அடையாளம் சொல்கிறான். "புல்லை மேயாத மான். ஆனால் செந்தமிழ்ச் சொல்லை மேயும். உடலெங்கும் புள்ளி மேவாத மான். ஆனால் முருகனை மனதில் அள்ளி மேவிய மான்."

"இப்படியொரு புள்ளிமானை யாரும் இங்கே பார்த்ததில்லை. புள்ளி மேவாததென்றால் அதென்ன வெள்ளி மானா?" வள்ளி நாச்சியாரின் விடையில் தமிழ்க்குறும்பு தெறித்தது.

தமிழ்க்கடவுளுக்கா பேசச் சொல்லித்தர வேண்டும்? "வெள்ளி மானா? இல்லை. நான் தேடி வந்தது வள்ளி மான். தமிழ்க்குறத்தியாம் கள்ளி மான்." இப்படியெல்லாம் காட்டில் அலைந்து திரிந்து பேசியிருக்கிறார் முருகன்.

இன்றைக்குப் பார்க்கலாம். வயதில் பையனை பல பேர் பல இடங்களில் பார்த்திருப்பார்கள். ஒரு நாள் தட்டச்சுப் பயிலகத்தில். காரணம் அங்கே வேண்டியவர்களும் தட்டச்சு படிப்பதுதான். மற்றொரு நாள் கோலப்போட்டி நடக்கும் இடத்தில். கோலம் போட அல்ல. யாரோ கோலம் போடுவதால். இப்படி ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைப் போலவா முருகன் சுற்றினார்?

காதல் வயப்பட்டு சுற்றுகின்றது நாம். முருகனுமா அப்படி? இப்படி காடு, மலை, அருவிக்கரை என்று சுற்றக் காரணம்? உலக மக்களாகிய நம்மீது அன்பு காட்டுவதலாயே அப்படிச் சுற்றினார். இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். இச்சா சக்தி வள்ளியம்மை. உலக இன்பங்களை முருகன் வள்ளியம்மையின் வழியாக அருள்கிறார். அதற்காகத்தான் வள்ளியைச் சுற்றினார். வள்ளி நாச்சியார் வழியாக அருளினாலும் முருகப் பெருமானே இச்சா சக்திக்கு ஆதாரம்.

அதை நேரடியாகவே அருளலாமே. எதற்காக வள்ளி நாச்சியார் வழியாக அருள வேண்டும்? தாய்மைப் பண்பிற்கு உயர்வு கொடுக்க வேண்டியே முருகன் அப்படிச் செய்தார். பிள்ளை பிறப்பதற்கு வித்திடுவது தந்தைதான். ஆனால் அத்தோடு சரி. பத்து மாதம் சுமப்பதை விடுங்கள். மண்ணில் குழந்தை பிறந்ததுமே, பசிக்கு ஒரு வாய் அமுதூட்ட எதன் துணையுமின்றி தாயால் மட்டுமே முடியும். ஆக கருணையின் முதல் துளியே தாயிடமிருந்துதான் வருகிறது. அதை முருகக் கடவுள் உயர்விக்கவே, இகலோக சுகமனைத்தையும் வள்ளியம்மை வழியாக வழங்குகிறார்.

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே


இப்படி வள்ளியை உய்வித்து அதன் மூலம் உலகோருக்குக் கருணை காட்ட, காடு, மேடு, வயல், அருவி என்றெல்லாம் திரிந்த கந்தனே, இந்த உலகித்துள்ள எல்லா வினைகளையும் எங்களிடமிருந்து ஓட ஓட விரட்டும் கதிர்வேலை நாங்கள் மறவோம். அப்படி மறக்காததால் நாங்கள் இல்லற ஒழுக்கத்தை அரைகுறையாகக் கொண்டு தன்னலம் கூடிக் கெட மாட்டோம். அனைத்தும் முருகனருள்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, October 30, 2006

40. படைப்பில் அடைப்பில்லாமல் இருக்க

ஏழு பிறப்பு என்று சொல்கின்றோமே! அதென்ன ஏழு பிறப்புகள்! வள்ளுவர் சொல்கிறார். மாணிக்கவாசகர் சொல்கிறார். அருணகிரி சொல்கிறார். எல்லோரும் சொல்கின்றார்கள். அதென்ன ஏழு பிறப்புகள்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - வள்ளுவர்

மா ஏழ் சனனம் கெட - கந்தரநுபூதியில் அருணகிரி

எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் - திருவாசகத்தில் மாணிக்கவாசகர்


தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள். ஏழு என்பது இங்கு எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. வகைகளைக் குறிப்பது. ஏழு வகையான பிறப்புகளில் நாம் உழல்கிறோம். உருவத்தில் மனிதராகவே பிறப்பெடுத்தாலும் உள்ளத்தால் இந்த ஏழில் ஒன்றாகவே இருப்பார்கள்.

இப்படி ஏழில் ஒன்றாகப் பிறந்து உலகமாயைகளில் வீழ்வதில் அருணகிரிக்கு விருப்பம் இல்லை. அப்படி மாயையில் மூழ்குவது மூடத்தனமாகப் படுகிறது. ஆகையால் "கோவே, கொடி போன்ற குறமகளின் தோளினைப் படரும் தெய்வமே, ஈசன் வணங்கிப் பணியும் குருவே!" என்றெல்லாம் வேண்டி ஏழுவிதமான பிறப்புகளிலுமிருந்து விடுதலை கேட்கிறார்.

மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே


"சிவசங்கர தேசிகனே!" சிவசிங்கரப் பெருமானுக்கு முருகன் குருநாதனல்லவா! அது எப்படி? எல்லாரும் வேதங்களை ஓதுவார்கள். ஆனால் வேதங்களே ஓதுவது சிவனின் திருநாமத்தை. வேதமும் வேதத்தை ஓதுவாரும் என்றும் சென்று வணங்குவது கயிலையீசனை. கயிலையில் ஈசன் அமர்ந்திருக்கும் மேருமலைக்கு அருகில் இருப்பது கந்தமாதன பர்வதம். அங்கே முருகப் பெருமான் அமர்ந்திருப்பார். நான்முகன் அந்த பொழுது தேவனையும் தேவியையும் தரிசித்து வரப் புறப்பட்டார். வழியில் கந்தவேள் சக்திவேலோடு அமர்ந்திருக்கிறார். முருகனைப் பார்த்தார். ஆனால் பார்க்காமல் போனார். போனவர் ஈசுவரனையும் ஈசுவரியையும் வழிபட்டார். திரும்பி வருகையில் இருகையிருந்தும் முருகை வணங்கவில்லை. மீண்டும் பார்த்தும் பார்க்காமலும் போனார்.

இது பொய். பார்க்கமலே சென்றிருந்தால் தவறில்லை. பார்த்தும் பார்க்காமலும் போவது நடிப்பு. அப்படிச் சென்ற திசைமுகனை முருகப் பெருமான் அழைத்துக் கேட்டார். நான்முகனின் நான்கு தலைகளிலும் ஆணவம் ஏறிக்கிடந்தது.

"நான்முகனே! பார்த்தும் பார்க்காமல் போவது பெரியவர்க்கு அழகா?"

"முருகா! படைப்புக் கடவுள் நான். படைப்பில் அடைப்பு ஏற்படாமல் முனைப்பாக செயல்படும் வேளையில் பார்வை பிசகியிருக்கலாம்! அது குற்றமாகாது!" பிசகு பிரம்மன் நாக்கில் இருந்தது.

முருகன் பொறுத்தார். "சரி. உமது தொழிலுக்கு அடிப்படை?"

"முருகா! சிருட்டித் தொழிலை வேதங்களை எனது மனதில் உருட்டிப் படைக்கிறேன். நான்கு முகங்கள் வேதங்களாகிப் படைக்கின்றன!" நான்கு தலைகளிலும் கனம் அதிகரித்தது. முத்தொழிலுக்கும் மூல முதல்வன் ஈசன் என்பதைக்கூட மறந்தார். தானே அனைத்தும் என்ற கூடா கர்வம். அது பங்கப்பட வேண்டுமல்லவா! முருகன் வாய் திறந்தார்.

"சரி. வேதமே உமது நாதமென்றால். அதைச் செப்புக!"

வேதம் ஓங்காரமாகத் தொடங்கும். ஆகையால் ஓங்காரம் ஒலித்தார் பிரம்மன். அதை அப்படியே நிறுத்திய முருகன், அந்த ஓங்காரத்திற்குப் பொருள் கேட்டார். திகைத்துப் போனார் பிரம்மன். விக்கல் தொண்டையை அடைத்தது. விடை தெரியாமல் நாணம் வந்தது. "அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்" என்ற நிலை.

சினந்தார் முருகன். "பிரம்மனே! வேதங்களின் நாதன் என்று சொல்லும் உமக்கு அதன் தொடக்கத்திற்கே பொருள் தெரியவில்லை. இனி படைப்புத் தொழிலைச் செய்யும் தகுதியை இழந்தீர். உமது ஆணவம் இத்தோடு நீங்கட்டும்." கையை மடங்கி நான்கு தலைகளும் பொடிப்பொடியாக ஆகுமாறு குட்டினார். முருகப் பெருமான் தீண்டியதும் ஆணவம் போனது. ஆனாலும் பிரம்மனைச் சிறையிட்ட முருகன், படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார்.

பிரம்மன் படைத்ததைக் காக்கும் வல்லமை விஷ்ணுவிற்கும் அவைகளை அழிக்கும் திறமை ருத்திரனுக்கும் இருந்தது. ஆனால் முருகப் பெருமானின் படைப்புகள் சிறப்பாக இருந்ததால் அவற்றைக் காக்கவும் அழிக்கவும் விஷ்ணுவாலும் ருத்திரனாலும் முடியவில்லை. ஆகையால் காக்கும் தொழிலையும் அழிக்கும் தொழிலையும் கூட முருகப் பெருமானே மேற்கொண்டு முத்தொழிலுக்கும் தாமே அதிபதி என்பதை நிலைநாட்டினார். விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்.

அவர்களுக்கு வேலையை மீண்டும் வாங்கித்தருவதாக உத்தரவு கூறி ஈசன் முருகனிடத்தில் வந்தார். பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலையும் ஒப்படைக்கச் சொன்னார். தந்தை சொல்லைத் தனையன் மீறவில்லை. அப்படியே செய்தார். வேதத்திற்கு பொருள் தெரியுமா என்று ஈசன் முருகனைக் கேட்க, கந்தவேளோ சிவபெருமானையே மண்டியிடச் செய்து சீடனாக்கி உபதேசித்தார். ஆகையால் முருகனை எல்லாரும் தகப்பன்சாமியென்றும் சிவகுருநாதன் என்றும் பரமகுரு என்றும் இன்னும் பல பெயர்களிலும் புகழ்கின்றார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, October 23, 2006

39. வீண்பெருமை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர்?

தோண்டத் தோண்ட நீர் தருவது நீருற்று. படிக்கப் படிக்க இன்பம் தருவது தமிழூற்று. அதிலும் இந்தப் பாடல் தீந்தமிழூற்று. சட்டென்று படிக்கின்றவர்களுக்கு ஒன்றும் புரியாதது போல இருக்கும். விளக்கிச் சொன்னால் அனைவருக்கும் பிடிக்கும்.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே


மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. வடமொழியில் "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது இறைவனின் கடமை என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்றால் பிற்காலத்தில் அருணகிரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். எப்படி தெரியுமா?
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களால் கட்டப்பட்ட பூச்சரத்தை குழலில் சூட்டிக் கொள்ளும் வள்ளி நாச்சியாரைக் களவு செய்து கலவு கொண்டவன் முருகன். தன்னை யாரேனும் தமிழால் வைதாலும் கூட அவரைக் காப்பாற்றி வாழ வைப்பான் அந்த முருகன். பாருங்களேன்! கந்தனின் கருணையை! ஆகையால் சூரனுடன் போரிட்டு தேவர்களைக் காத்து சூரனுக்கும் வாழ்வளித்தான். சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டானே! அந்த சேவலையும் மயிலையும் இன்றும் நாம் வழிபடுகின்றோமே! ஆக தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு என்கிறது தமிழ். கச்சியப்பரும் கூட இதே கருத்தைக் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதாளம் என்றால் தன்னைப் பற்றியே பெருமை பேசுதல். பாருங்கள் இத்தனை சிறிய சொல்லில் எத்தனை பெரிய பொருள். ஆதாளி என்றால் தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர். ஆதாளிவாயன் என்று ஊர்ப்பக்கம் இன்னமும் சொல்வதுண்டு. ஒன்றறியேனை - நல்லவைகள் ஒன்றும் அறியாதவனை. அறத்தீதாளி - அறத்திற்கு எதிரான தீய கருத்துகளை ஆள்கின்றவர். ஆண்டது செப்புமதோ - அருள் தந்து ஆட்கொண்டதை எப்படிச் சொல்வது? இந்த வரியை இப்பொழுது படியுங்கள். ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ! "முருகா! வீண்பெருமை பேசித் திரிந்து கொண்டிருந்த என்னை, நல்லவைகள் என்று ஆன்றோர் கூறுவதையெல்லாம் அறியாத என்னை, தருமத்திற்கு எதிரான தீய கருத்துகளைக் கொண்ட என்னை, நீ வலிய வந்து ஆட்கொண்டாயே! அந்தக் கருணையை என்னவென்று சொல்வது?" அருணகிரி கதறுகின்றார். இதைத்தான் ஆங்கிலத்தில் subjugation என்று சொல்வார்கள்.

அப்படி ஆட்கொண்டது எப்படித் தெரியுமா? அதையும் அவரே சொல்கின்றார். கூதாள மலர் என்று ஒன்று உண்டு. மிகவும் அழகான மலராக இருந்தாலும் மலருக்குரிய நறுமணமில்லாமல் திகழும். பொதுவாக மணமில்லாத மலர்களை யாரும் விரும்பிச் சூடிக் கொள்வதில்லை. ஆனால் முருகப் பெருமானுக்கு கூதாள மலரும் சூட்டப் படுகிறது. கிராதகன் என்றால் கொலைத் தொழில் புரிகின்றவர். அவர்களுக்கு வேடவர் என்றும் பெயருண்டு. ஆனால் இன்றைக்குத் தீயவர்களைக் கிராதகர் என்று கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. கிராத குலிக்கு இறைவா - வள்ளியை மணம் புரிந்து கொண்டதன் மூலம், கொலைத்தொழில் புரிவதால் இழிவானவர் என்று மற்றவர்களால் கருதப் படும் வேடர்கள் குலத்திற்கும் தலைவனாக விளக்குகின்ற வேலவா!

மணமில்லாத கூதாள மலருக்கும் மதிப்பளித்து சூடிக்கொண்டு, வள்ளியை மணந்து கொலைத் தொழில் வேடுவருக்கும் தலைவனாகி, வேதாளங்களுக்கும் பூதங்களுக்கும் கூட இறைவனாக விளங்கும் வேலவரே! வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! இந்தப் பெருமையை எப்படிச் சொல்வது!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, October 16, 2006

38. அகந்தையால் கந்தையாவோமா!

அகந்தை. எத்தனை கொடிய நோய்! அகந்தை தாக்கியதால் வீழ்ந்தவர் எத்தனை பேர்கள்! சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது அகந்தை. ஔவையாரையும் விடவில்லை இந்த அகந்தை. எப்படி வருந்துகிறார் பாருங்களேன்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்

பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு வளைந்து விட்டதே. கதலி என்பது வாழையின் ஒரு வகை. இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.

புலம்பலுக்குக் காரணம்? ஆணவம். செருக்கு தலைக்கு ஏற, தமிழில் தன்னை மிஞ்ச யாருமில்லையென்று இருந்தார் ஔவையார். "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்று கேட்டு செருக்கழித்தான் முருகன். அப்பொழுது ஔவையார் புலம்பியதுதான் மேலே குறிப்பிட்டது. அரிசியிலிருக்கும் கருக்கு சுவையை அழிப்பது போல, உள்ளத்தில் தோன்றும் செருக்கு பெருமையை அழித்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள், "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சொல்லி வைத்தார்கள். ஆகையால் எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும். "நிலை உயரும் பொழுது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்" என்றார் கண்ணதாசன்.

சரி. அந்த அகந்தையை வளரவிடாமல் செய்வதெப்படி? அகந்தை கொடியைப் போன்றது. கொடி கொம்பினடியில் பிறந்தாலும், பிறகு கொம்பையே வளைத்து மூடிவிடும். அகந்தையும் அப்படித்தான். தான் தோன்றிய இடத்தையே மறைத்து விடும். கொடியை கூரிய வாளால் அரிந்து தள்ளுவது போல அகந்தையையும் அழிக்க வேண்டும். அதற்கான வாள் எது? "
பொறையாம் அறிவால்" என்ற அரிவாள் பயன்படும் என்கிறார் அருணகிரி. பொறுமையென்னும் அறிவு நல்ல விளைவுகளைத் தரும். பொறுத்தார் பூமியாள்வார் அன்றோ! இதைத்தான் "மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே!" என்கிறார் அருணகிரி.

கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவில்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


மனப் பயிற்சியும் தேர்ந்த கல்வியும் பொறுமையென்னும் குணமும் இல்லாதார் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உண்டு. நன்றாக செல்வாக்கோடு வாழ்ந்த ஒருவன் அடிமையாகிப் போனால், அவனது செருக்கும் மமதையும் அழியும். அதற்காக இருக்கின்ற செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு அடிமையாகப் போவதா? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. முருகனுக்கு அடிமையாகி விட்டால்? இருக்கின்ற செல்வமும் வளமையும் அப்படியே இருக்க, முருகன் அருளெனும் செல்வமும் மேலும் பெருகும். ஔவையின் அகந்தையை நீக்கிய கந்தனுடைய கருணை நமக்கும் கிட்டும்.

அதற்காகத்தான் அருணகிரியும் வேண்டுகிறார். "கிரிவாய் விடு விக்கிரமவேலிறையோன்! பரிவாரம் எனும் பதமேவலையே புரிவாய்!" பரிவாரம் - முருகனுடைய அடியவர்கள் என்னும் பரிவாரம். அந்த அடியவர் கூட்டத்தில் இருப்பது பேரின்பம். நமக்கு ஒத்த நண்பர்கள் கிடைப்பது போல. அப்பேற்பட்ட கூட்டத்தில் நாமும் சேர்ந்தால் நல்வாழ்வு பெறலாம். "கிரவுஞ்ச மலையைத் தொளைத்த வேலுடைக் குமரா, உன்னுடைய அடியவர் கூட்டத்தைச் சேரும் பெருமையைத் தருவாய்! பொறுமை என்னும் பண்பால் அகந்தையை அழித்துக் காப்பாய் கந்தா!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 10, 2006

37. கற்கையில் வேண்டியது பணிவு

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்னவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே


காலுக்கு அணிகலன் பூட்டும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டு. ஆண்கள் தண்டை அணிந்தால், பெண்கள் தண்டையும் அணிந்து அத்தோடு சிலம்பும் கொலுசும் சேர்த்து அணிவார்கள். அன்றைக்கே ஆண்கள் அணிவதை பெண்கள் அணிந்து கொள்வதும், பெண்கள் அணிவதை ஆண்கள் அணிந்து கொள்ளாமையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

சிவபெருமானுக்கு அணிகலம் எதுவென்றால் வெண்டலை மாலை. அதாவது மண்டையோட்டு மாலை. மண்ணை உண்ட மாலுக்கு அணிகலனோ குளிர்ச்சி பொருந்திய துளசி மாலை. முருகனுடைய திருவடிகளுக்கு அணிகலன் எது தெரியுமா? வானோர் முடி. அப்படித்தான் கந்தரலங்காரம் சொல்கிறது.
ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கணிகலம் தண்ணந் துழாந் மயிலேறும் ஐயன்
காலுக்கணிகலம் வானோர் முடியும் கடம்பும்கையில்
வேலுக்கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே!


இதே கருத்தைத்தான் இந்தப் பாடலிலும் சொல்கின்றார். வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா! வேதங்களை ஓதும் திசைமுகன் முதலான விண்ணவர்கள் அனைவரும் வந்து தொழும் திருவடிகள் முருகனுடையவை. அப்படிப் பட்ட முருகன் யாருடைய திருவடிகளைத் தொழுகின்றான் என்றால், அது வள்ளி நாச்சியார். அதை அழகாக "குறமின் பத சேகரனே" என்று அருணகிரி கூறுகின்றார். ஏன் தொழுகின்றார் என்பதைச் சென்ற பாடலில் பார்த்தோம்.

இப்படியெல்லாம் முருகனைப் புகழ்ந்து பேசி அருணகிரி யாசிப்பது என்ன? அவரும் ஒரு பொருளைத்தான் கேட்கின்றார். அதுவும் எப்பேற்பட்ட பொருள் தெரியுமா? ஈசன் முருகனிடம் கேட்ட பொருள். "நாதா குமரா நம என்று அரனார் உன்னை வணங்கி எந்தப் பொருளைக் கேட்டாரோ, அந்தப் பொருளை எனக்குத் தந்தருள்வாய் முருகா!" என்று இரக்கிறார் அருணகிரி.

சிவபெருமான் முருகனிடம் வணங்கிப் பெற்றது உபதேசம். அந்த உபதேசத்தைத் தனக்கும் அருள வேண்டுமென்று கேட்கின்றார் அருணகிரி. "நாவேறு பாமணத்த" என்று தொடங்கும் சுவாமிமலை திருப்புகழைப் பாருங்கள்.
"சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராகவே உரைத்த குருநாதா!
"
பரமசிவன் முருகனைச் சுற்றி வந்து உபதேசம் கேட்டாராம். கேட்பவன் சீடனல்லவா! அதனால்தான் அந்தப் பணிவு. இதையெல்லாம் ஏன் அருணகிரி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்? கற்கையில் பணிவு வேண்டும். பணிவில்லாத கல்வி பயனில்லாதது. அதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதுதான் முருகன் சிவனுக்கு உபதேசம் செய்த கதை. அந்தப் பணிவோடு அருணகிரி, "திசைமுகன் முதலான விண்ணோர் தொழுதேத்தும் திருப்பாதங்களைக் கொண்ட முருகா! ஈசன் உன்னை வணங்கித் தொழுது பெற்ற உபதேசம் நானும் பெற வழி வகுப்பாய்!" என்று வேண்டுகின்றார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 03, 2006

36. கணவன் மனைவிக்குள் பேதமில்லை

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது. உடலில் நீர் இருக்கிறது. நெருப்பு இருக்கிறது. காற்று இருக்கிறது. அதுவும் மூச்சாக உள்ளேயும் வெளியேயும் சுற்றுகிறது. மண் இருக்கிறது. அதனால்தான் மண்ணோடு சேர்ந்து மண்ணாகி விடுகிறது. விண்வெளியும் இருக்கிறது. விண்ணின் பண்பு பரந்ததுதானே! மனத்தைக் காட்டிலும் பரந்தது ஒன்று உண்டா? இப்படி ஐம்பூதங்களால் ஆன உடம்பைப் படைத்தது பிரமன். விதி என்பதும் பிரமனைக் குறிக்கும். ஒருவருடைய பிறப்பையும் விதியையும் முடிவு செய்வதால் பிரனமுக்கும் விதி என்று பெயர்.

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
மதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

விதி காணும் உடம்பு என்பது நான்முகனால் படைக்கப் பட்ட ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். இந்த உடம்பு இகலோகத்திற்கு மட்டுமே உரியது. உலகத்தை விட்டுப் போகையில் உடம்பையும் விட்டு விட்டுதான் செல்ல வேண்டும். இப்படி இந்த உலகத்தில் இருக்கும் வரை உடலால் உந்தப் பட்ட வினைகள் அனைத்தும் விலக வேண்டும். அது எப்படி விலகும்? பிரமனே முதலில் இன்னதென்று முடிவு கட்டி மண்ணுலகத்திற்கு நம்மை அனுப்பி வைத்த பிறகு, வினை மாற வேண்டுமென்றால்?

அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஒருவருடைய கழலடிகளைத் தொழுதால், பிரமன் தந்த வினையும், நம்மிடம் வந்த வினையும், போன பிறப்பிலிருந்து கொண்டு வந்த சொந்த வினையும் ஒழியும். மலர்க்கழல் என்கிறார் வள்ளுவர். யாருடைய கழல்களைச் சொல்கின்றார் அருணகிரி?

ஒரு அழகான சொல்லாடலைப் பார்ப்போம். மதிவாள் நுதல். நுதல் என்றால் நெற்றி. தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் "தக்க சிறு பிறை நுதலும்" என்ற அடியை நினைவு கூர்க. மதி என்றால் நிலா. வாளின் பண்பு என்ன? பிறை போல லேசாக வளைந்திருக்கும். பளபளவென ஒளி வீசும். இப்பொழுது மதிவாள் என்றால் என்னவென்று விளங்கியிருக்கும். மதிவாளைப் போன்ற நெற்றி என்பதைத்தான் மதிவாள் நுதல் என்கிறார். பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றி யாருக்கு இருக்கிறது. அதை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். மதிவாள் நுதல் வள்ளி.

மதிவாள் நுதல் வள்ளியை அன்றி வேறு யாரையும் துதியா சுரபூபதி முருகன். அந்த முருகப் பெருமானின் மலர்க்கழல்கள்தான் உடம்பை விடா வினைகளை நீக்கும். அதெல்லாம் சரி. அதென்ன வள்ளியை அன்றி யாரையும் துதிக்காத முருகன்? முருகன் வள்ளியைத் துதிக்கின்றாரா? ஆம் என்பதே விடை. அதில் ஒரு பெரிய உட்பொருள் அடங்கியிருக்கிறது. தேவயானையைத் துதிக்கும் முருகன் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?

வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. இச்சை உலகாயமானது. காயம் என்பது உடல். அந்த உடலோடு கூடிய வினை போக அருள வேண்டியது இச்சா சக்தி. இம்மைத் துயரத்தை முருகன் வள்ளி நாச்சியார் வழியாகத் தீர்க்கின்றார். அதற்காக நமக்காக எல்லாம் வல்ல முருகப் பெருமான் வள்ளியைத் துதிக்கின்றார். பாருங்கள் இதுதான் தெய்வப் பண்பு. முருகப் பெருமானின் அன்பு. உலகத்தாரின் பாவங்களை ஏசு கிருஸ்து சிலுவையாகச் சுமந்தார் என்றும் சொல்வார்களே!

இதில் மற்றொரு மறை பொருளும் இருக்கிறது. இல்லறத்தால் ஒழுக வேண்டிய முறையே அது. கணவன் மனைவி வழியாகக் நல்லவைகளைச் செய்வது. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பெரியவர் சிறியவர் பேதமில்லை என்பதை முருகப் பெருமான் வழியாக நமக்கு அருணகிரி காட்டுகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, September 26, 2006

35. மங்குவதெல்லாம் எவை?

மங்குவது எது? தங்கம் மங்கும். வெள்ளி மங்கும். பட்டை தீட்டாத வைரமும் மங்கும். புழங்காமல் ஓரத்திலே வைத்திருந்தால் வெங்கலப் பாத்திரமும் மங்கும். அவற்றைத் துலக்கினால் ஒளி வீசிப் பிரகாசிக்கும். ஒவ்வொன்றைத் துலக்கவும் ஒவ்வொரு பொருள். வெங்கலப் பாத்திரத்திற்குப் புளியும் சாம்பலும். வைரத்திற்கு இரும்பு அல்லது வைர அரம். வெள்ளிக்கு தூயவெண் திருநீறு. தங்கத்திற்கு பன்னீரில் நனைத்த பட்டு அல்லது பருத்தித் துணி. இவைகள் எல்லாம் உயிரற்ற பொருட்கள். உயிருள்ள மனிதர்களுக்கு எவையெல்லாம் மங்கும். எவையெல்லாம் மனிதனிடத்தில் தங்குமோ, அவையெல்லாம் மங்கும். அறிவு மங்கலாம். புகழ் மங்கலாம். செல்வம் மங்கலாம். நற்பண்புகள் மங்கலாம். குலப் பெருமை மங்கலாம்.

இவையெல்லாம் மங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அருணகிரிக்கு இருந்தது ஒரே காரணம்தான். அதைக் கந்தரலங்காரத்தில் இப்படிச் சொல்கிறார்.
"கண்டுண்ண சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும்!
".
"கற்கண்டுச் சுவையொடு சொல்லி அழைக்கும் மெல்லிய பூவையரின் காமக் கலவிக் கள்ளினை மொண்டு உண்டு அயர்ந்தேன்," என்று நயமாக இயம்புகிறார். கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.

அப்படி மங்கிய அனைத்தும் முன்னிலும் பிரகாசமாக சுடர் விட்டது எங்ஙனம்? முருகப் பெருமானின் திருவருளால். அந்த நன்றியை இங்கே மறக்காமல் சொல்கிறார் அருணகிரி. "முருகா, சிங்காரம் செய்து கொண்ட பெண்களோடு இன்பம் துய்க்கும் தீய வழக்கங்களால் புகழும் அருளும் மங்காமல் காத்தருள்வாய்!" ஏற்கனவே சொன்னதுதான். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போக வேண்டும் என்றுதான் அருணகிரி கேட்கிறார்.

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே

சங்க்ராம என்றால் போர்திறம் மிகுந்த என்று பொருள். "செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!" என்று விளையாட்டாக சொல்லியிருக்கின்றார் காளமேகம். செரு என்றால் போர்க்களம். செருவில் புகும் வீரர்களை வெல்லும் வேலன் என்பது பொருள். சிகாவல என்றால் மயிலேறி வலம் வருகின்ற என்று பொருள். சங்க்ராம சிகாவல சண்முகனே! பொருள் புரிகின்றதல்லவா. கங்காநதி பால கிருபாகரனே என்பது இறுதியடி. கங்கை இங்கே ஏன் வந்தது? மங்கியதெல்லாம் துலக்க நீர் வேண்டுமல்லவா! கங்கை இந்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்படும் நதி. வற்றாத ஜீவநதி. அதனால்தான் கங்கா நதி பால கிருபாகரனே என்று செய்யுளை முடிக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 19, 2006

34. நீர் நிலைகளில் செய்யத் தகாதன

இந்த மண்ணுலகில் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஐந்து பூதங்களில் ஒன்று. உணவாகப் பயன்படுகிறது. உணவாக்கப் பயன்படுகிறது. தூய்மை செய்யப் பயன்படுகின்றது. மருந்தாக உதவுகிறது. மருந்தாக்க உதவுகிறது. இன்னும் பல பயன்கள். அதனால்தான் வள்ளுவரும் "நீரின்றி அமையாது உலகு" என்று புகழோங்கச் சொல்கிறார். நாமும் நீரின் முதன்மையையும் தேவையையும் உணர்ந்தவர்கள்தான். ஆகையால்தான் நமது பண்பாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. நீர்நிலைகளில் ஓராடையுடன் கூட குளியாமை. நீரில் உமிழாமை. நீரில் கழிவிடாமை. குளம் குட்டைகளை குழப்பாமை. இப்படி பல கட்டுப்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டில் இருந்தாலும் நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம்? இனிமேலாவது நாம் நீரினை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதையும் தூய்மைப் படுத்தும் பண்பு நீருக்குண்டு. கிருத்துவர்கள் கூட நீரினை ஞானஸ்தானத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாமியர்களும் கூட தொழுகைக்கு முன் நீரால் தூய்மை செய்து கொள்கிறார்கள். ஆகையால்தான் தமிழர்கள் இறைவனை நீரோடு தொடர்புடையவனாக வைத்தார்கள். தென்னாடுடைய சிவனின் தலையில் கங்கையை வைத்தவர்கள், தமிழ்க்கடவுள் முருகனை கங்கையில் உதித்த காங்கேயன் என்றார்கள். மந்தாகினி என்பது கங்கையின் மறுபெயர். அருணகிரி "மந்தாகினி தந்த வரோதயனே" என்று புகழ்வதில் வியப்பேது. வேண்டிய வரங்களைத் தருகின்ற வள்ளல் பெருமானல்லவா அவர்.

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே

கந்தன் என்ற பெயரையும் ஸ்கந்தன் என்ற பெயரையும் பலர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் ஒரே தெய்வத்தைக் குறிக்கும் பெயரானாலும் இரண்டுக்கும் பொருள் வேறு. பொருளில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. "ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலி கல்மிஷ நாசினீம்". அதாவது கலியுகத்தின் துன்பங்களைத் தீர்க்க வல்லவன் என்று வடமொழி கூறுகிறது. தமிழ் என்ன சொல்கிறது? ஆனையைக் கட்டும் கட்டைக்குக் கந்து என்று பெயர். ஆனையை ஓரிடத்திலிருந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய கட்டையைச் சங்கிலியோடு பிணைத்து அதன் காலில் கட்டி விடுவார்கள். நடுவில் எங்கேயேனும் தங்கினால் ஒரு குழி தோண்டி அதில் அந்தக் கட்டையைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவே. அந்தக் கட்டைக்குக் கந்து என்று பெயர். அதிலிருந்து பிறந்ததுதான் கந்தன் என்ற பெயர். ஆனையோடே இருந்து, அதன் நடவடிக்கைகளைத் தடுக்காது, அதே நேரத்தில் தேவையான பொழுது கட்டுப்படுத்துகின்ற கந்தினைப் போல கந்தனும் நம்முடனே இருந்து வாழ்வித்து, வேண்டிய பொழுது கட்டுப்படுத்தும் தன்மையுடைவன். பாருங்கள். தமிழில் பெயர் வைக்கும் பொழுது கூட எத்தனை நுட்பமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றார்கள்.

ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் துன்பம் தரக்கூடிய சிந்தை. அனைவருக்கும் இல்வாழ்க்கை சிறந்து விளங்குவதில்லை. அப்படி சிறப்பில்லாத இல்வாழ்க்கை உடையவர்கள், அதை எண்ணி எண்ணி துன்பத்திற்கு உள்ளாவார்கள். இதைத்தான் "சிந்தாகுல இல்" என்கிறார் அருணகிரி. செல்வம் பல இருந்தும் துயரம் சேரும் சிலருக்கு. அனைவருக்கும் செல்வம் இன்பத்தை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட செல்வமும், சிந்தாகுல இல்வாழ்க்கையும் இருந்தால், வாழ்க்கை நரகமாகும். எப்படிப் பட்ட நரகம் தெரியுமா? விந்திய மலைக் காடுகளைப் போல, செல்லும் வழி மறக்கச் செய்யும் நரகமாம். உண்மைதானே! சிந்தாகுல இல்லும் செல்வமும் இருந்தால் நமக்கு எல்லாம் மறந்து போகும். செய்ய வேண்டியதை மறந்து கண்டதைச் செய்து மென்மேலும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படிப் பட்ட துன்பங்களுக்கு வாழ்வழித்து நமக்கு வாழ்வளிப்பார் முருகப் பெருமான்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 12, 2006

33. சமயச்சண்டை வேண்டேன்

மத நல்லிணக்கத்தைப் பற்றி இன்றைக்கு யார் யாரோ பேசுகின்றார்கள். ஆனால் அன்றைக்கே சொல்லிலும் செயலிலும் காட்டியிருக்கின்றார் அருணகிரி. அருணகிரியின் காலகட்டம் சைவ வைணவச் சண்டைகள் நிறைந்த காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவங்களை வைத்துக் கொண்டு அதே சிறந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பற்றாக்குறைக்கு கன்னட தெலுங்கு நாடுகளிலிருந்து வேறு புதிய கருத்துகள் இறக்குமதி. அவர்களோடு சண்டை. அதற்கு முந்தய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பேசாமல் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை. வந்த சண்டையை விடாமல் அவரும் இறைவன் அருளால் கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கடலில் மிதந்தார். சுண்ணாம்புக் காளவாயில் வைத்துப் பூட்டினாலும் பொய்கையில் குளித்த தாமரையாக வெளியே வந்தார். "மூசு வண்டறை பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தேவாரமும் பாடினார். இன்றைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மதத்தில் குற்றம் காண்பதே பலருக்கு மதத்தொழிலாகப் போய் விட்டது. ஊரெங்கும் உலகெங்கும் இந்தக் கொடுமைதானே நடக்கிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் மற்ற மதத் தெய்வங்களைக் குற்றஞ் சொல்கிறார்களே!

இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது. அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. ஒருவருடைய கருத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணாத்துரை. ஆகையால் வீண்சண்டை கூடாது. இப்படி மதங்களை வைத்துக் கொண்டு ஆன்மீகத் தலைவர்கள் எல்லாம் சண்டையிடுவதை அருணகிரி வெறுத்தார். தானும் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாதேயென்று வருந்தினார். ஆகையால் இறைவனை வேண்டி, "அப்பனே முருகா! அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!" என்று வரம் கேட்கிறார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் உளதோ
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே


அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். இப்பேர்ப்பட்ட வரத்தை இறைவனிடம் கேட்கும் பொழுது இறைவனைப் புகழ்ந்தே கேட்கிறார். எப்படிப் புகழ்கிறார்?

"கொலையே புரி வேடர்!" வேடுவர்கள் கொலைத்தொழில் புரிகின்றவர்கள். மக்களை அல்ல. மாக்களை. அதுவும் உண்பதற்கு. நாடு பிடிக்கும் ஆசையில் மக்களைக் கொல்கின்றவர்கள் அல்லர் வேடுவர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொல்லும் வழக்கமுடையவர். ஆகையால்தால் "கொலையே புரி" என்று அந்தக் கொலையைக் கூட உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார் அருணகிரி. அந்தக் குலத்தில் ஒரு பிடி இருந்ததாம். அந்தப் பிடியைக் கொண்டவனே என்று முருகனைப் புகழ்கிறார். பிடி என்றால்? பிடி என்றால் பெண் யானை. பெண் யானையின் நடையும் அழகுதான். அப்படி அழகாக நடக்கும் வள்ளியைக் கொண்டவன் முருகன்தானே!

"மலையே மலைகூறிடு வாகையனே!" உயர்ந்து நிற்பது மலை. ஆகையால்தான் மலை போல் உயர்ந்தவர்கள் என்று தமிழில் புகழ்கிறோம். உயர்ந்த பண்புகளை உடைய முருகனையும் மலையே என்று உயர்த்திச் சொல்கிறார். முருகன் எந்த மலையைக் கூறிட்டார்? தாரகாசுரனின் கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தார் முருகன். "அப்படி மலையைக் கூறிட்ட திறமுடையவனே! வேடுவர் குலமகள் வள்ளியைக் கொண்டவனே! கசடறக் கற்காதவர்கள் போல நானும் மூளை குழம்பித் தவித்து, சமயக் கூச்சலிட்டு வீழ்வேனோ! அப்படியெல்லாம் நேராமல் காத்தருள்வாய் முருகா!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 05, 2006

32. மூன்று சகோதரர்களின் கதை

ஒரு ஊரில் அண்ணன் தம்பிகள் மூவர் இருந்தனர். நல்ல குடும்பம். மூத்தவன் திருமணம் செய்து கொண்டான். வாய்த்தவள் நல்ல மனையாள். இல்லறம் நல்லறமாக இருந்தது. இறைவன் அருளால் மழலைச் செல்வங்கள் பெருகின. அண்ணன் வாழும் வாழ்வை நினைத்து அடுத்தவனும் திருமணம் செய்து கொண்டான். அந்தோ பரிதாபம்! அவனுக்கு பெண்ணெனும் உருவில் வாய்த்தவள் அன்பே துளிர்க்காத உலக்கைக் கட்டை போன்றவள். மனைவியை திருத்த வழி தெரியாமல் அவளோடு சண்டையிட்டு அவனும் அமைதியிழந்தான். நிம்மதி போனது. பிள்ளைகளும் ஆன பின் பிரச்சனைகள் பெரிதாயின. இளைய அண்ணன் படும் வேதனையைப் பார்த்து கடைசித் தம்பி இல்லறத்தையே வெறுத்து துறவறம் பூண்டான்.

இவர்கள் மூவரில் மூத்தவனும் கடைக்குட்டியும் நிம்மதியாக இருந்தார்கள். வாழ்க்கை இனிதாகச் சென்றது. நினைத்தது நினைத்தபடி நடந்தது. அவரவர்கள் வழியில் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் இரண்டாமவன் நொந்து நூலாகித் துவண்டு வாழ்க்கையையே வெறுத்து விட்டான். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் எல்லாம் விரும்பிய வகையில் நடந்தால் வாழ்க்கை இன்பமயமானது. ஏறுக்கு மாறாயின் எல்லாம் பாழ். அப்படி வாழ்க்கை பாழாவது நமது கையிலும் இருக்கிறது. நம்மைச் சேர்ந்தவர்கள் கையிலும் இருக்கிறது. இதைத்தான் பர்த்தாவிற்கு ஏற்ற பதிவிரதை கிடைக்கா விட்டால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அன்றே விவாகரத்து பற்றி பாடியிருக்கிறார் ஔவையார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ஒருவன் வாழ்வதும் மற்றொருவன் வீழ்வதும் எதனால்? ஊழ், விதி, முன்வினை என்றெல்லாம் சொல்கின்றார்களே! அவைகளினாலா? வள்ளுவர் என்ன சொல்கின்றார்?
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
." அதாவது, ஊழ்வினையைக் காட்டிலும் வலிமை மிக்கது எது? எப்படிச் சென்றாலும் அது தன்னுடைய தன்மையைக் காட்டி விடும். விதியின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்கின்றார். சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எழுதிய இளங்கோவடிகள் சமணர் என்று கருதப் படுகிறவர் (சைவர் என்று தமிழாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்). அவரும் முற்பிறப்பில் கோவலன் செய்த பிழையால் மறுபிறப்பில் அவன் துன்புற்றதைக் கூறுகிறார். பொதுவாகவே எல்லாரும் ஒப்புக் கொள்வது என்னவென்றால் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன் உண்டு என்று.

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


இதைத்தான் அருணகிரியாரும் முருகனிடம் கேட்கிறார். "அப்பா முருகா! பாழான இந்த வாழ்வு எனப்படும் மாயையில் என்னை வீழ்ச்சியுறும் வகையில் இட்டாயே! ஏன்? தாழ்வானவை என்று அறிஞர் பெருமக்களால் அறியப்படும் தீமைகளை நான் புரிந்தேனா? என்னைக் காப்பாற்றிய தெய்வமே! நீ நன்றாக இருப்பாய்! காரணத்தைக் கூறிவிடு!" என்று இறைஞ்சுகிறார் அருணகிரி.

பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ஒருவரிடம் கேட்கும் பொழுது, "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று கேட்போம். அதையே கவிதை நடையிலும் பயன்படுத்தி செய்யுளை முடிக்கும் பொழுது "வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!" என்று கூறுகிறார். எந்த வினைகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவன் இறைவன் என்பதால் அவனிடமே காரணத்தைக் கேட்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 29, 2006

31.செவ்வானமே செந்தாமரையே

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. "இல்லே எனும் மாயையில் இட்டனை நீ" என்று சென்ற பாடலில் வருந்திய அருணகிரிநாதர், இந்தப் பாடலில் எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதைச் சொல்கிறார்.

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


தொடக்கமே முருகனின் பண்பை விளக்குகிறது. செவ்வேள் முருகன் செம்மைப் பண்புடையவன். அவனது மனம் மட்டுமல்ல உடலும் உடைகளும் கூட செம்மையானவை. எட்டுத்தொகை நூல்களில் தலையாயது குறுந்தொகை. இதில்தான் தருமிக்காக இறைவன் பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற செய்யுளும் தொகுக்கப் பட்டுள்ளது. இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று தொடங்கியவர், "பவழத்தன்ன மேனி" என்கிறார். அதாவது பவழம் போன்ற செக்கச் செவேலென்று இருக்கும் தெய்வம் என்கிறார்.

பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. அநுபூதியிலும் அருணகிரி அதைத்தான் சொல்கிறார். "செவ்வான் உருவில் திகழ் வேலவன்!" விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார்.

"முருகா! பேரிறைவா! துன்பத்தில் உழன்று கொண்டிருந்தேன் நான்! உண்மையை உணராமல், நன்மையைப் புரியாமல், தன்மையை விளங்காமல் திரிந்தேன் நான்! அந்த மாயைகள் எல்லாம் விலக, அவைகள் எல்லாம் ஒவ்வாதவை என்று நீயே உணர்வித்தாய்! அப்படி உன் கருணையால் ஒவ்வாதவைகளை ஒருவர் உணர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. எம்மால் ஆவதொன்றுமில்லை." என்கிறார் அருணகிரி. சென்ற பாடலில் "மாயையில் இட்டதற்கு" முருகனைக் காரணம் கேட்ட அருணகிரி, இந்தப் பாடலில் முருகன் காப்பாற்றியதைச் சொல்கிறார். இறைவனாகப் பார்த்துக் காப்பாற்றா விட்டால் உய்ய வழி ஏது? இப்பொழுது நான்கு வரிகளையும் படியுங்கள்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன்
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
நாமாக ஒன்றைச் செய்ய முடியுமா? இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும் என்கிறார் அருணகிரி. பட்டினத்தடிகளும் அப்படித்தானே! "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என்று இறைவன் உணர்வித்த பிறகே உய்த்தார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 22, 2006

30. மலத்தை மலத்தால் நீக்கி...

தத்துவச் சுவையும் கவிச்சுவையும் ஒருங்கே சேர்ந்த அழகான பாடல் இது. பக்தியையும் கவித்துவமாகச் சொல்வதில் அருணகிரிநாதர் வல்லவர். மதுரைத் திருப்புகழை எடுத்துக் கொள்ளுங்கள். "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம்" என்று முருகன் திருவடிகளைச் சொல்கிறார். வரை என்றால் மலை. வரையாடு என்று இன்னமும் ஊர்ப்புறங்களில் மலையாட்டைச் சொல்வார்கள். இருக்கின்ற மலைகளில் எல்லாம் உலவி நிறைந்து நமக்கு நல்லருட் சீர்களை வரிசைகளாகத் தரும் திருவடிகள் என்று முருகன் திருவடிகளைக் குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்ற சொற்றொடரை எவ்வளவு அழகாக "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது" என்று குறிப்பிடுகிறார்.

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே


மல்லுக்கட்டுகிறவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? பலர் கூடிப் பார்க்க, மல்லர்கள் இருவர் தோளோடு தோள் பொருதிப் போரிடுவார்கள். இரண்டு வலுவான தோள்கள் கொண்டவர்களே மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், பன்னிரண்டு தோள்களைக் கொண்ட முருகப் பெருமான் என்ன செய்வார்? "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" என்கிறார். வாகு என்றால் தோள். வீரவாகு என்றால் வீரமிக்க தோள்களை உடையவன் என்று பொருள். பண்டொரு முறை நாரதர் நடத்திய வேள்வியில் மந்திரத்தை தவறாக உச்சரித்ததால் வேள்வித்தீயிலிருந்து முரட்டு ஆடு ஒன்று வந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. முருகன் அருளால் வீரவாகு அந்த ஆட்டை அடக்கி முருகனுக்கே வாகனமாக்கினார். அது வீரவாகுவின் தோள்வலியைக் காட்டுகிறது.

சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய பன்னிரண்டு தோள்களை வைத்துக் கொண்டு முருகன் என்ன செய்கிறார்? "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று அருணகிரி புகழ்கிறார். தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மாலைகள் சூட்டி வழிபடுகிறார் அவர். "முருகா சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய உன்னுடைய பன்னிரண்டு தோள்களிலும் தீந்தமிழில் சொற்களால் நான் தொடுத்த பாமாலைகளை அணிந்து கொண்டு சுடர் மிகுந்த வேலோடு அருள்கின்றவனே!"

"இல்லே எனும் மாயை". இல் என்றால் இல்வாழ்க்கை. "இல்வாழ்க்கை என்ற மாயையில் என்னை விழச்செய்தாய் முருகா! நானும் இல்லறத்தை நல்லறமாகப் பேணாமல் பொல்லாதவனாகி உழன்றேனே! அப்பொழுதெல்லாம் என்னுடைய அறியாமையை நீக்கவில்லையே! ஏன்?" என்று முருகனைக் கேட்கிறார் அருணகிரி. ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.

ஏற்கனவே இவ்வுலகவாழ்க்கை என்னும் மாயையில் இருந்தார் அருணகிரி. அந்த மாயா மலத்தோடு பொல்லாத்தனம் என்னும் ஆணவ மலத்தையும் கொடுத்தார் முருகன். பிறவிப் பாவங்கள் என்னும் கர்ம மலம் வேறு. மூன்று மலங்களும் சேர்ந்து பல தவறுகள் செய்தார் அருணகிரி. ஆனால் இறுதி விளைவு முருகனின் கருணையாக விளைந்தது. மனமும் குணமும் வெளுத்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 15, 2006

29. அலுப்புத் தட்டாத அமுதம்

அருணகிரி தமிழ்க் கடல். அதிலும் அவரை ஓசைமுனி என்பார் பாம்பன் சுவாமிகள். தமிழிலுள்ள ஓசைகளெல்லாம் அத்துப்படியானவர். அவர் சொல்லித் தத்துவம் கேட்பது நமக்கெல்லாம் இனிமை. இந்தப் பாடலும் ஒரு தத்துவப் பாடலே! இந்தப் பாடலில் இரண்டு உண்மைகளைக் கூறியுள்ளார் அருணகிரி. உணர வேண்டிய உண்மைகள்.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே


இந்த உலகாய பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு இரண்டு பண்புகள் உண்டு. நன்மை ஒன்று. தீமை மற்றொன்று. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லமும் எடுக்கலாம். சாராயமும் காய்ச்சலாம். அது பயன்படுத்துகின்றவர்களின் தன்மையைப் பொருத்தது. மிகவும் நல்லது என்ற பொருளிலும் கூட ஏதேனும் தீமை இருக்கும். மிகவும் இனிமையானதாக கருதப்படும் அமுதம் சாவாமருந்து. அதை அருந்துதல் இன்பம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இளமையாக சாகாமல் இருப்பது. கண்டிப்பாக அலுப்புத் தட்டிவிடும். அப்படியெல்லாம் எந்தத் தீமையையும் தராத ஒரு அமுதம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்படிப் பட்ட அமுதமும் உண்டு. அயில்வேல் அரசனே அந்த அமுதம். அயில் என்றால் கூர்மை. கூர்மையான வேலையுடைய முருகனே இன்பத்தை மட்டுமே தரக்கூடிய அமுதம். அதுவும் எப்படி? சற்று விளக்கமாகப் பார்ப்போம். கூரில்லாதவன் என்று யாரைச் சொல்வோம்? அறிவில் சற்று மந்தமாக இருப்பவர்களை கூரில்லாதவன் என்பது வழக்கம். கூர்மை என்பது அறிவின் பண்பு. வேல் ஞானத்தின் வடிவம் என்பது நாம் அறிந்ததே! ஞானம் கூர்மையாக இருக்க வேண்டும். அறிவு பெருகப் பெருக ஆராய்ந்து தெளியும் பண்பு பெருகும். நாம் அவசரப்பட்டு முடிவெடுப்பதெல்லாம் அறிவீனத்தினால்தானே! ஆக முற்றும் உணர்ந்தவர் தீயவராக இருக்க முடியாது. அப்படி அனைத்தையும் அறியும் அறிவு முருகனிடத்தில் அடங்கும். ஆகையால் ஞானாகரனே என்று அடுத்த சொல்லைப் போடுகிறார்.

இப்பொழுது படியுங்கள். "ஆனா அமுதே! அயில் வேல் அரசே! ஞானாகரனே!" புரிந்திருக்கும் என நினைக்கிறேன். "இறைவனே! நீ தீதில்லா அமுது. எப்படித் தெரியுமா? அனைவரையும் அடக்கும் ஞானம் உன்னிடத்தில் அடங்கும். அதனை உருவகமாக கையில் வேலாகத் தாங்கிய இறைவனே!"

இப்படியெல்லாம் அழைத்து விட்டு, நவிலத் தகுமோ என்கிறார். அதாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறார். எதைச் சொல்ல முடியுமா என்று அருணகிரி தயங்குகிறார்! இறைவனிடத்தில் நேரடி உபதேசம் பெற்ற அவருக்கே சொல்லி விட முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதா? என்ன அது? அடுத்த இரண்டு வரிகளைப் பாருங்கள். "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!" இதைத்தான் அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அறிவு அடக்கத்தைக் கொடுக்கும் என்று முன்பே அறிந்தோம். அந்த அடக்கம் இறைவனின் கருணையால் வருவது. அதன் விளைவு என்ன? அந்த விளைவைத்தான் அருணகிரியால் சொல்ல முடியவில்லை.

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். அதாவது இறைவனை உணர்ந்தவர்கள் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னதில்லையாம். அப்படிச் சொன்னவர்கள் உணர்ந்ததில்லையாம். அருணகிரி உணர்ந்தவர். ஆயினும் நமக்காக, நாம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இங்கே வந்து தடுக்கி விட்டார். இறைவன் கருணையின் விளைவு என்ன தெரியுமா? நான் என்ற அகந்தையை விழுங்கி விட்டு, அனைத்துப் பரிமாணங்களிலும் அன்பு என்ற அமைதி ஒழுக இருக்கும் தன்மை. அதை எப்படி விளக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. மேலே சொன்னது புரிந்தது போல இருக்கும். ஆனால் முழுவதும் புரியாது. ஏனென்றால் சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சொல்லொணா நிலையது. பரவசம் என்று சொல்லலாம். ஆனால் பரவசம் எப்படி இருக்குமென்று யாரேனும் சொல்ல முடியுமா? வெல்லம் இனிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். எப்படி இனிப்பாக இருக்குமென்று யாரால் சொல்ல முடியும்? சுவைத்துப் பார்த்து உணர்ந்தவர்களிடம் வெல்லம் இனிக்குமென்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். முருகப் பெருமானின் அருட்பெருங் கருணையின் விளைவு இனிக்கும் என்று இதுவரை சொல்லி வந்த அருணகிரிநாதர் எப்படி இனிக்குமென்று சொல்ல முடியாத நிலை இதுதான். ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, August 07, 2006

28. யாரிடம் கடன் கேட்க வேண்டும்?

வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால் அருணகிரிக்கு அது எளிதில் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. ஆம். இந்தப் பாடலில் இரண்டு வரிகளில் வாழ்க்கைத் தத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் சொல்லாத பலவற்றைச் சொல்வது.

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கு எதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே

நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. ஆனாலும் யாரும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. நாம் மகிழ்கின்ற விடயங்களெல்லாம் மின்னலைப் போன்றி தோன்றி மறையக் கூடியவை. ஒருவேளை அவை நிலைத்தாலும் மகிழ்ச்சி நிலைக்காது. சுவை மிகுந்த உணவுகளை உண்கிறோம். அந்தச் சுவை எவ்வளவு நேரம் இன்பம் தருகிறது. நாவில் உணவு இருக்கும் வரை சுவை தெரியும். அவ்வளவுதான். சரி. நாவில் தொடர்ந்து இருக்கட்டும் என்று உணவை வாயிலேயே வைத்திருந்தால் சுவை தொடருமா? சுவை சுமையாகிப் போகாதா? உலக இயக்கமாகிய கலவி இன்பமும் சிறு பொழுதே. மின்னலைப் போல. தோன்றும். நிற்பது போல நின்று உடனே மறையும்.

வாழ்க்கையே அப்படித்தானே. நேற்று பிறந்து, இன்று வாழ்ந்து, நாளை மடிவதுதானே வாழ்க்கை. மின்னலைப் போலத்தான். நினைக்காத பொழுது தோன்றி நினைக்காத பொழுது மறைவது. எப்பொழுது நடக்குமென்று கூற முடியாது. "மின்னே நிகர் வாழ்வு" என்கிறார் அருணகிரி நாதர். அந்த வாழ்வையும் நாம் விரும்புகிறோம். ஏன் விரும்புகிறோம் என்று யாருக்கும் தெரியாது. தெரியாமலே நடக்கிறது நமது வாழ்க்கை. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் பிறக்கிறோம். தொடக்கமே கோணல். முதல் கோணல் முற்றும் கோணல். அப்படிப்பட்ட வாழ்வை நாம் தெரியாமலே விரும்புகிறோம்.

ஏன் விரும்புகிறோம்? எல்லாம் விதியின் பயன். விதி என்பது ஊழ். ஊழிற் பெருவலி யாவுள என்று கூறுகிறார் வள்ளுவர். பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான் அவர்கள் அடக்கமாக வாழ்கின்றார்கள். அமரருள் உய்க்கின்றார்கள். நமக்கும் எடுத்துச் சொல்கின்றார்கள். வள்ளுவரைப் போல. அருணகிரி நாதரைப் போல. "என்ன இது! மானிடப் பிறப்பெடுத்து விட்டோம். எல்லாம் மின்னலைப் போல நடக்கிறது. இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! இதைத்தான் விதியின் பயன் என்பதோ!" என்று வருந்துகிறார் அருணகிரி.

கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க நிலைப்பவரிடம்தானே கேட்க வேண்டும். என்றும் நிலைக்கும் கந்தனைக் கேட்கிறார் அருணகிரி. பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே என்று அடுக்குகிறார் புகழாரங்களை. பொன் ஒளிரும். முருகன் ஒளி பொருந்தியவர். மணி குளிரும். ஆறுமுகர் குளிர்ச்சி மிகுந்த பார்வை கொண்டவர். பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்.

இதையெல்லாம் கூறிவிட்டு மன்னே என்கிறார். அதாவது மன்னன். மன்னன் என்பவன் ஆள்கின்றவன். பழநி ஆண்டவன் என்றைக்கும் ஆள்கின்றவன் என்று சொல்கிறார். மயிலேறிய முருகனைப் புகழ்வதில் அருணகிரிக்கு அவ்வளவு ஆர்வம். முதலில் மயிலேறிய சேவகனே என்றார். இந்தப் பாடலில் மயிலேறிய வானவனே என்கிறார். பூவோடு சேர்ந்தவை அனைத்தும் மணக்கும் என்பது போல, முருகனோடு தொடர்புடைய அனைத்திற்கும் புகழ் கிடைக்கும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 01, 2006

27. ஆதாரத்தின் ஆதாரம்

ஆதாரம் என்ற சொல் தமிழில் மிகவும் முக்கியமானது. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒன்று ஆதாரமாக இருக்கிறது. உடலுக்கு உயிர் ஆதாரம். உயிருக்கு ஆன்மா ஆதாரம். ஆதாரமில்லாதது ஒன்றுமில்லை. பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் இருக்கும். நெய்யிற்கு கிண்ணம் ஆதாரம். கிண்ணத்திற்கு நெய் ஆதாரம். நெய் இல்லையென்றால் அதை வைக்கக் கிண்ணம் தேவையில்லை. கிண்ணம் இல்லையென்றால் நெய்யை சேமிக்க முடியாது. அதே போலத்தான் உடலும் உயிரும். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றிற்குப் பயனில்லை.

இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும். இப்பொழுது புரிகிறதா ஆதாரத்தின் ஆதாரம்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனோ
தீதா சுரலோக சிகாமணியே!

அருணகிரி படாத பாடெல்லாம் பட்டவர். பிறகு ஆண்டவனின் அருட்பார்வை அவர் மீது பட்டது. அருணகிரியாக இருந்தவர் அருணகிரி நாதரானார். முதலில் அவர் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த பொழுது இறைவன் அருள் என்னும் ஆதாரம் இல்லை. அதைத்தான் "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே" என்கிறார். "முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? சிற்றின்பச் சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை உன்னுடைய அருளைக் கொடுத்து கை தூக்கி விட்டாய். எனக்கு என்ன தகுதி என்று நீ கொஞ்சமும் நினைகக்வில்லையே! உன் கருணையே கருணை!"

"ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்ற வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறுவார்கள். "முருகா! உன்னுடைய அருளைப் பெறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தேனே! நீ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லயே!" என்று. ஆனால் முருகன் நினைக்காமலா அருணகிரிக்கு வாழ்வு வந்தது? ஆகையால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம். இருந்தும் மற்றொருவர் உதவுகிறார். அவரிடம் என்ன சொல்வோம்? "ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.

அந்தக் கருணை உள்ளம் கொண்டவனை எப்படிப் பாராட்டுவது? அவனது நலன்கள் என்ன? வேதாகம ஞான விநோதன். வேதங்களை அறிந்தவனே! அவைகளைக் கடந்தவனே! சரி. வேதம் என்றால் என்ன? எழுதாக் கிளவி நான்கு வேதங்களா? அப்படியும் கொள்ளலாம். உண்மையில் வேதம் என்பது மெய்ப்பொருள் தத்துவம். அந்த மெய்ப்பொருளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது? "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்கிறது தேவாரப் பதிகம். வேதம் நான்கிலும் அல்ல. மாறாக வேதம் நான்கினும். அதாவது நான்கு வேதங்களைக் காட்டிலும் நமச்சிவாயம் என்ற மந்திரம் மெய்ப்பொருளாகும். ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம். தொண்டர்களுக்கு உள்ளுமிருந்து அவர்களைக் கடந்தும் இருக்கும் கருணைக் கடவுள். இப்பொழுது படியுங்கள். "வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!

இறைவனுடைய புகழை சொல்லால் அளக்க முடியாது. செயலால் விளக்க முடியாது. மனதால் அளக்க முடியுமா? வானம் விரிந்தது என்று சொல்வோம். எவ்வளவு விரிந்தது என்று இன்று வரைக்கும் எந்த அறிவியல் அறிஞரும் சொல்லியிருக்கின்றாரா? அதுபோலத்தான் இறைவனின் புகழும். அதைத்தான் "மன அதீதா" என்ற சொற்றொடரில் அழகாக விளக்குகிறார் அருணகிரி நாதர்.

"முருகா! எத்தனையோ குற்றங்கள் செய்தேன். உன்னுடைய அருளை அடைய எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அடித்தளமும் இல்லை. இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல், ஓடி வந்து என்னை ஆட்கொண்ட பரமகுரு! நீ தொண்டருக்கும் தொண்டன்! வேத நாயகன்! வாக்கால் மனத்தால் அளக்கவொன்னா தனிப் பெருந் தெய்வம்! தேவலோகத்தின் மணிமுடி! உன் புகழ் வாழ்க!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 25, 2006

26. நிற்பதும் நிலைப்பதும்

இந்த உலகத்தில் குற்றங்கள் எதனால் நடக்கின்றன? குற்றம் செய்கின்றவர்கள் எதனால் அதைச் செய்கின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். அது நிலையாமையை நினைக்காமை. நாம் நிலைப்போம். நமது வாழ்வு நிலைக்கும். நமது அதிகாரம் நிலைக்கம் என்று நினைப்பதுதான் குற்றங்களின் அடிப்படைக் காரணம். நிற்பது எது? நிலைப்பது எது? நிற்பவைகள் எல்லாம் நிலைப்பவைகள் அல்ல. வானுயர உயர்ந்த மாடமாளிகைகள் நாள்பட நிற்கும். நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஆனால் எப்பொழுதும் நின்று நிலைக்குமா? ஆக எப்பொழுதும் ஒன்று நிற்குமானால் அது நிலைப்பது.

பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.

நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.

மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே


நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"

அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.

மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 11, 2006

25. சண்டை போட்டு எதிர்ப்பவனைக் காப்பது

இந்த மண்ணில் பிறந்து விட்டாலே, உடலெடுத்து விட்டாலே, உடலிலுள்ள ஒவ்வொரு உணர்விற்கும் உணவிடுவது அவசியம். பசிக்கு உணவு. வருத்தத்தில் அழுகை. களைப்பில் ஓய்வு. மகிழ்ச்சியில் சிரிப்பு. சிலர் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பார்கள். அது மிகவும் தவறானது. எந்த உணர்வையும் அடக்குவது எதிர்மறையான விளைவையே தரும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அலுப்புத் தட்டிவிடும். பசிக்கு மீறி உண்டால், உடல் உபாதை உண்டாகி உண்டதெல்லாம் மறுபடியும் ஆகாதென்று மருத்துவரால் தடுக்கப்பட்டு விடும்.

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே


அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!

கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.

சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.

ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 04, 2006

24. அடியின்றி முடியவோ!

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.

முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"

முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.

வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.

குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 27, 2006

23. சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொன்னால்

முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!

காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே


மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.

"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.

சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.

இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.

"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 20, 2006

22. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

நுண்ணிய கருத்துகளை தண்மையாகச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அருணகிரியே! இந்தப் பாடலில் நான்கு வரிகள். முதல் வரி மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். மற்ற மூன்று வரிகளும் முருகனைப் புகழ்கின்றன. ஒரு பெரிய விஷயத்தை ஒரு அடியில் அடக்கிவிட்டு, முருகனைப் புகழ மூன்று அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் முருகனைப் புகழ்வதிலுள்ள ஆர்வம். எவ்வளவு புகழ்ந்தாலும் போதவில்லை. அதே நேரத்தில் அநுபூதி அடைவதற்கான கருத்தையும் சொல்ல வேண்டும். அதற்குக் கை கொடுகிறது தமிழ். சுருங்கச் சொல்ல பொருள் மிகுந்த சொற்களும், விரித்துச் சொல்ல அழகான சொற்களுமாய் தமிழ் விளையாட்டு நடத்தியிருக்கிறார் அருணகிரி.

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே


கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?

சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.

அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.

முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.

சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 13, 2006

21. பாத்திரம் அறிந்து பிச்சையிடு

மிகவும் அரிதான பொருள் பொதிந்த பாடல். அதனால்தானோ என்னவோ "அரிது" என்றே துவக்கியிருக்கிறார் அருணகிரி.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே



பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.

மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.

சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.

அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.

"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.

இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.

தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.

பக்தியுடன்,
கோ.இராகவன்