Monday, May 08, 2006

16. எட்டும் எட்டு

எட்டு என்றாலே எட்டி ஓடும் அளவிற்கு மூடத்தனமான எண்கணிதப் பைத்தியம் மக்களை ஆட்டிவைக்கிறது இன்று. ஆனால் அனைத்திற்கும் எட்டாப் பரம்பொருள் எட்டில் அடங்குமென்று ஆன்றோர் கூறுகிறார்கள். அதாவது நமக்கு எட்டும் எட்டு. நமக்கு புரியக்கூடிய எட்டு பண்புகளால் இறைவனைப் புகழ்கிறார்கள். அதென்ன! எடுத்துச் சொன்னால் மற்ற பண்புகளும் புரியாதா என்று வாதிடலாம். ஆனால் அதனால் பயனில்லை. பிரசவம் என்பது வேதனை மிக்க மறுபிறப்பு என்று ஆண்கள் அறியத்தான் முடியுமே தவிர உணர முடியாது. இப்படி மனித உணர்வுகளே உணர்ந்து கொள்ள முடியாத பொழுது, அனைத்தையும் கடந்தும் அவற்றின் உள்ளும் இருக்கும் கடவுளின் அத்தனை பண்புகளையும் நாம் உணர முடியுமா? சொல்ல முடியுமா? சொல்லில் முடியுமா? வள்ளுவரும் எண்குணத்தைப் பற்றிச் சொல்கிறார்.
"கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
"

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

சரி. அந்த எட்டு பண்புகளையும் பார்ப்போம். 1)தன்னடக்கம் 2)துப்புரவு 3)இயற்கை ஆர்வலன் 4)அனைத்துமறியும் ஆர்வம் 5)உணர்ச்சிவசப்படாமை 6)பேரருள் 7)பேராற்றல் 8)கட்டுப்பாடு. இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். எண்குண பஞ்சரனே என்று முருகனைச் சொல்கிறார். பஞ்சரம் என்றால் கூடு. எட்டு குணங்களும் கூடியவனே என்று பொருள். இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. பட்டிக்காட்டிலும் பைந்தமிழ்ப் பழக்கம்.

அப்படி எட்டு பண்புகள் கூடிய முருகன் எப்படிப்பட்டவராம்! பொரு என்றால் போர். புங்கவர் என்றால் தேவர். பொருபுங்கவர் என்றால் போரிடும் தேவர். குருபுங்கவர் என்றால் குருதேவர். அசுரர்களோடு போரிடும் தேவர்களும் புவியிலுள்ள உயிரினங்களும் வணங்கும் குருதேவர் முருகன். அதைத்தான் "பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவர்" என்கிறார் அருணகிரிநாதர்.

அப்படி நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

20 comments:

said...

//பஞ்சரம் என்றால் கூடு//

//இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. //

கொச்சை என்பதை என்ன பொருள் கொண்டு இங்கே எழுதியுள்ளீர்கள் என்று தெரியவில்லை. கோழியை அடைக்கப் பயன்படும் "பஞ்சாரம்" கொச்சை மொழி அல்ல.

said...

இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். //

அடடா.. இந்த மகத்துவத்த புரிஞ்சிக்காம எத்தனை பேர் இருக்காங்க..

ஜெ! வுக்கு எட்டு ரொம்ப ராசியானதாமே.. சரியா?

said...

// கொச்சை என்பதை என்ன பொருள் கொண்டு இங்கே எழுதியுள்ளீர்கள் என்று தெரியவில்லை. கோழியை அடைக்கப் பயன்படும் "பஞ்சாரம்" கொச்சை மொழி அல்ல. //

கல்வெட்டு, பஞ்சரம் என்ற உச்சரிப்பைப் பஞ்சாரம் என்பதைத்தான் கொச்சை வழக்கென்றேன். அது தவறு என்று சொல்லவில்லை. இயல்பு திரிவது கொச்சை தானே என்பதற்காகச் சொன்னது.

said...

// // இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். //

அடடா.. இந்த மகத்துவத்த புரிஞ்சிக்காம எத்தனை பேர் இருக்காங்க.. //

உண்மைதான் சார். எட்டு பண்பு சொல்றதால எட்டோட முடிஞ்சதுன்னும் நெனைக்கிறாங்க. ஆனா உண்மை அது இல்ல. நமக்குப் புரியுறது எட்டுதான்.

// ஜெ! வுக்கு எட்டு ரொம்ப ராசியானதாமே.. சரியா? //

எனக்குத் தெரியாது சார். ஜெயலலிதாவைத்தான் கேக்கனும்.

said...

இராகவன். வழக்கம் போல் நல்ல விளக்கம்.

எண்குணங்கள் என்று வேறொரு பட்டியல் படித்ததாக நினைவு. நீங்கள் இட்டிருக்கும் எண்குணங்களை கொஞ்சம் விளக்க முடியுமா? அவை மனிதருக்கு எட்டும் குணங்களாகத் தோன்றுகின்றன; சரி. ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த எண்குணங்களும் பொருந்துமா தெரியவில்லை.

இறைவனுடைய பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது குணங்களைக் குறிப்பவை என்று படித்திருக்கிறேன். இந்தப் பாடலில் வரும் மூன்று பெயர்களையும் கொஞ்சம் விளக்க முடியுமா?

said...

ஜோசஃப் சார். நீங்கள் எந்த எட்டைக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. ஜெவுக்கு ஒன்பது தான் இராசியான எண். ஒரு வேளை மஞ்சளாடை ஐயாவுக்கு எட்டு இராசியான எண்ணோ என்னவோ? :-)

said...

ராகவன்! வழக்கம் போல (அட போங்கடே..இதையே எத்தன தடவ சொல்றீங்கன்னு சொல்றீங்களா) நல்லா விளக்கி இருக்கீங்க.

நானும் கூட நீங்க கொச்சையா அப்படின்னு சொன்னவுடன் சண்டைக்கு வரலாமுன்னு நெனைச்சேன். 'தப்பாக' என்று சொல்லிருக்கலாம். 'கொஞ்சையா' அப்படின்னா எங்ககோ இடிக்குது. அதுக்குள்ள கல்வெட்டு கேட்டுட்டாவ..அதனால அந்த கதைய விட்டுடலாம்.

அந்த எட்டு பண்புகளில் 'இயற்கை ஆர்வலன்' என்றால் என்ன..கொஞ்சம் விளக்க முடியுமா.

said...

//நானும் கூட நீங்க கொச்சையா அப்படின்னு சொன்னவுடன் சண்டைக்கு வரலாமுன்னு நெனைச்சேன். 'தப்பாக' என்று சொல்லிருக்கலாம். 'கொஞ்சையா' அப்படின்னா எங்ககோ இடிக்குது. அதுக்குள்ள கல்வெட்டு கேட்டுட்டாவ..அதனால அந்த கதைய விட்டுடலாம்.//

ராகவன்! இதை தப்பா எடுத்துக்காதிய மக்கா! நான் சும்மா ஜாலியா வெளாடுக்கு தான் சொன்னேன். :-))

said...

//ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த எண்குணங்களும் பொருந்துமா தெரியவில்லை.
//

....ம்ம்ம் மனிதனுக்கு வேண்டிய நல்ல குனங்களை இறைவனுக்கு attribute பன்னி அந்த மாதிரி இருங்கப்பான்னு சொல்லறாங்களோ?

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். வழக்கம் போல் நல்ல விளக்கம்.
//

நன்றி குமரன்.

// எண்குணங்கள் என்று வேறொரு பட்டியல் படித்ததாக நினைவு. நீங்கள் இட்டிருக்கும் எண்குணங்களை கொஞ்சம் விளக்க முடியுமா? அவை மனிதருக்கு எட்டும் குணங்களாகத் தோன்றுகின்றன; சரி. ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த எண்குணங்களும் பொருந்துமா தெரியவில்லை. //

அப்படியா? அந்த எண்குணங்களையும் சொல்லுங்களேன். இரண்டையும் பொருத்திப் பார்ப்போம்.

இந்த எட்டும் மனிதர்களுக்கு எட்டும்தான். இறைவன் என்பது இந்த எட்டையும் தாண்டியது. மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக இந்த எட்டை வைத்துச் சொல்வது.

// இறைவனுடைய பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது குணங்களைக் குறிப்பவை என்று படித்திருக்கிறேன். இந்தப் பாடலில் வரும் மூன்று பெயர்களையும் கொஞ்சம் விளக்க முடியுமா? //

கண்டிப்பாக விளக்கலாம். ஆனால் அவைகளை அடுத்து வரும் பாடல்களுக்கு எழுத வைத்திருக்கிறேனே. :-)

said...

// சிவா said...
ராகவன்! வழக்கம் போல (அட போங்கடே..இதையே எத்தன தடவ சொல்றீங்கன்னு சொல்றீங்களா) நல்லா விளக்கி இருக்கீங்க.
//

அப்படிப் போடுங்க....இதை இன்னமும் விரிவாச் சொல்லலாம். நேரம்னு ஒன்னு இருக்கே. அதுக்குள்ள மாட்டிக்கிட்டு முழிக்கேன்.

// அந்த எட்டு பண்புகளில் 'இயற்கை ஆர்வலன்' என்றால் என்ன..கொஞ்சம் விளக்க முடியுமா. //

சினிமா ஆர்வலன்னா என்ன? சினிமாத்தேட்டர் எங்க போனாலும் அவனப் பாக்கலாம். வசதியானவனா இருந்தா டீவி, டீவீடீயும் கையுமா எப்பவும் பாக்கலாம். இல்லையா? அது போல இயற்கை ஆர்வலன்னா இயற்கையோட எப்பவும் பார்க்கலாம். உணரலாம். கொள்ளலாம். புரிஞ்சதா?

said...

// Samudra said...
//ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த எண்குணங்களும் பொருந்துமா தெரியவில்லை.
//

....ம்ம்ம் மனிதனுக்கு வேண்டிய நல்ல குனங்களை இறைவனுக்கு attribute பன்னி அந்த மாதிரி இருங்கப்பான்னு சொல்லறாங்களோ?//

கிட்டத்தட்ட பாயிண்டப் பிடிச்சீங்க சமுத்ரா. பொதுவா எப்பவுமே ஒன்ன வெச்சி இன்னொன்ன வெளக்குறது வழிவழியா வர்ரதுதானே...அது மாதிரிதான் இது.

அது சரி. படத்துல இருக்குறது யாரு?

said...

//// 'கொஞ்சையா' அப்படின்னா எங்ககோ இடிக்குது. அதுக்குள்ள கல்வெட்டு கேட்டுட்டாவ..அதனால அந்த கதைய விட்டுடலாம்.//

ராகவன்! இதை தப்பா எடுத்துக்காதிய மக்கா! நான் சும்மா ஜாலியா வெளாடுக்கு தான் சொன்னேன். :-)) //

அதெல்லாம் முடியாது. நான் கோவிச்சுக்கிட்டேன். எனக்குப் பிடிச்ச ரெண்டு பாட்டுப் போட்டு என்னைக் குளுமைப்படுத்தும். அதுல ஒரு பாட்டு முருகன் மேல இருக்கட்டும். அதுவும் இளையராஜா இசையா இருக்கட்டும்.

said...

அமைதி அமைதி :-))

முருகன் பாட்டா! உடனே எனக்கு நினைவுக்கு வருவது 'எந்த வேலு வந்தாலும், கந்தவேலு முன்னாடி சரணம்..சரணம்' (மகராசன் படத்தில் இருந்து) பாடல் தான் நினைவுக்கு வருது. வேற நல்ல பாடல் இருக்கிறதா என்று யோசித்து பார்க்கிறேன். ஒரு பாடல் என்ன..ஒரு பதிவே போட்டுடறேன் ராகவன்...உங்க விருப்பமாகவே ( பேசாம ஒரு பதிவு எழுதி கொடுத்திருங்க..பாடலை நான் ரெடி பண்ணி கொடுக்கிறேன்..உங்க ப்ளாக்லயோ, கீதத்திலயோ போட்டுடலாம்) :-))

said...

// சிவா said...
அமைதி அமைதி :-)) //

அமைதியாயாச்சு. :-)

// முருகன் பாட்டா! உடனே எனக்கு நினைவுக்கு வருவது 'எந்த வேலு வந்தாலும், கந்தவேலு முன்னாடி சரணம்..சரணம்' (மகராசன் படத்தில் இருந்து) பாடல் தான் நினைவுக்கு வருது. வேற நல்ல பாடல் இருக்கிறதா என்று யோசித்து பார்க்கிறேன். ஒரு பாடல் என்ன..ஒரு பதிவே போட்டுடறேன் ராகவன்...உங்க விருப்பமாகவே ( பேசாம ஒரு பதிவு எழுதி கொடுத்திருங்க..பாடலை நான் ரெடி பண்ணி கொடுக்கிறேன்..உங்க ப்ளாக்லயோ, கீதத்திலயோ போட்டுடலாம்) :-)) //

ம்ம்ம்...லிஸ்ட் எல்லாம் குடுக்க முடியாது. நீங்களா கண்டு பிடிச்சுப் போடனும். அதும் கீதத்துலதான்.

இத்தனை பெரிய இசையமைப்பாளர் இளையராஜா....அவரு இசையில முருகன் பாட்டு இது ஒன்னுதானா? என்னங்க இது? நம்ப முடியலையே! ;-)

said...

//இத்தனை பெரிய இசையமைப்பாளர் இளையராஜா....அவரு இசையில முருகன் பாட்டு இது ஒன்னுதானா? // சரி! சரி :-)). யோசிக்கிறேன்..யோசித்து பதிவு போட்டுடலாம் :-)

said...

///எண்குணங்கள் என்று வேறொரு பட்டியல் படித்ததாக நினைவு. நீங்கள் இட்டிருக்கும் எண்குணங்களை கொஞ்சம் விளக்க முடியுமா? அவை மனிதருக்கு எட்டும் குணங்களாகத் தோன்றுகின்றன; சரி. ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த எண்குணங்களும் பொருந்துமா தெரியவில்லை.
//

குமரன்,
நீங்கள் சொல்லும் எண்குணம் என்பது அஷ்டமா சித்திகளாக இருக்குமோ என்னவோ?.

said...

எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! ஏன்-ன்னா ரொம்ப தத்துவம் அடுக்காம, ஆரம்பத்துலேயே என்னவன் பேரைச் சொல்லுறாரே! அதுவும் டைப் டைப்பா! முருகன்-குமரன்-குகன்-அவன்-வன்-ன்னு அவன் பேரை நைசா சொல்லிப் பாத்துக்குறதுல ஒரு தனி கிக்:) தனி இன்பம்!:)

said...

ஹேய் முருகா குமரா குகா என்று மொழிந்து
உனக்காக உருகும் செயல் தந்து...
உணர்வு "என்று அருள்வாய்"? என்னிக்கு அருள்வியோ?

ரவி: "நோ நோ! நிப்பாட்டு நிப்பாட்டு! டேய் முருகா, "என்று அருள்வாய்?"-ன்னு கொஸ்டின் மார்க் போட்டா நல்லாவா இருக்கு? நீ தான் எனக்குன்னு எப்பமே அருளிக்கிட்டு இருக்கிறியே முருகா!"

முருகன்: "சரி டார்லிங், இப்போ என்ன, பாட்டை மாத்தணுமா?" :)

ரவி: "ஹிஹி! ஆமாம் முருகா! தப்பா?"

முருகன்: "சேச்சே! நீ சொல்லு டார்லிங், உனக்காக மாத்தறேன்"!

ரவி: "என்று அருள்வாய்?"-என்னிக்கி கொடுப்பியோ-ன்னு நான் உன்னைக் கேட்பேனா? நீ தான் கூடவே இருக்க! கொடுத்துக்கிட்டே இருக்கியே!
So, அது "என்று அருள்வாய்?" இல்ல! உணர்வென்று அருள்வாய்!"

முருகன்: "அடிப் பாவி, கள்ளி"

ரவி: "ஆமாம்!
1. முருகா, குமரா, குகா, என் அவனே என்று...
2. உனக்காக உருகும் செயல் தந்து...
3. அந்த உருகுதலையே என்னோட உணர்வென்று அருள்வாயாக!"

முருகன்: "ஆகா!"

ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி உருகி, அந்த உருகுதலே எனக்கு உணர்வா ஆயிறணும்! உருகலே உணர்வென்று அருள்வாய்!"

முருகன்: "ஹேய்...."

ரவி: "போதும் போதும்! கிட்ட வராத..சொல்லிட்டேன்...அடி விழும்...போடா" :))))

said...

ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதான் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதிட்டேன்! :) Sorry!