Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது சற்று விவகாரமானது என்று இன்று பலர் சொல்வார்கள். காரணம் இது இறைவனை வணங்குதலை மறுத்து எழுந்த தத்துவம். கிட்டத்தட்ட நாத்திகம் என்றே சொல்லலாம்.

வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு வெளிப்படையாகவே பிரபலமாக இருந்திருக்கிறது. இது சரியா தவறா என்று தர்க்கிப்பதை விட இதனைத் தெரிந்து கொள்ளும் முகமாக ஆதிநாதன் வளமடல் என்ற நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.

ஆதிநாதன் வளமடல் என்று அழைக்கப்படும் இந்த நூல் காராணை விழுப்பரையன் மடல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிநாதன் என்ற பெயரைப் பாருங்கள். நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக இருக்கிறது. இதனால் கடவுள் வாழ்த்து நீங்கலாக அனைத்துப் பாடல்வரிகளையும் நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக வைத்து எழுதியிருக்கிறார் செயங்கொண்டார். எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள மூன்று அடிகளையும் பாருங்கள்.
பாதி உடம்பொருத்திக்கு ஈந்தும் படர்சடையின்
மீதும் ஒருத்திக்கு இடம் கொடுத்து அரனார்
காதல் உழந்திலரோ?
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது.



கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் - இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு


சரி. நாம் கடவுள் வாழ்த்துக்கு வருவோம். கடவுளை மறுக்க வேண்டும். ஆனால் காதலைப் பெரிதாக்கிச் சொல்ல வேண்டும். அதைத்தான் மேலே குறிப்பிட்ட செய்யுளில் நான் காண்கிறோம்.

கொன்றை முடித்தார்க்கும் - கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
கோபாலன் ஆனார்க்கும் - கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
அன்று படைத்தார்க்கும் - மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
ஆளல்லேம் - அடியவர்கள் அல்லர் நாங்கள்
இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு - காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது. தென்றல் தூதான கதைகளும் உண்டு. ஓடும் நீர் தூதானதும் உண்டே. அகநானூறு படித்தால் இயற்கை பலவிதங்களில் தூதானது விளங்கும். அந்தத் தூதும் காதலுக்குத் தோதாக வேண்டும். அதுதான் உலகாயதத் தத்துவம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து வீரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்


முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயக்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. முழுவேகத்தில் சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் அன்று. இறை என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 04, 2007

06. இஇ - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்


முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 26, 2007

05. இஇ - நல்வழி

நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை. ஆகையால் பிள்ளையாரை வணங்கி இந்த நூலைத் தொடங்கியிருக்கின்றார்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா


முத்தமிழிலும் சிறப்புற்று இருந்தால்தான் அருந்தமிழ் நூல்களைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட நூல்களே காலத்தை வென்று நிலைக்கும். அப்படிப்பட்ட நூலாக நல்வழி இருக்க விரும்பிய ஔவை விநாயகப் பெருமானிடம் தமிழ் மொழியில் திறமை பெருக வேண்டும் பாடலே கடவுள் வாழ்த்து.

வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.

இங்கேயும் ஒரு பண்டமாற்று. நான்கைக் கொடுத்து விட்டு மூன்றைக் கேட்கிறார் ஔவை. பார்த்தால் ஔவைக்கு நட்டம் போலவும் பிள்ளையாருக்கு லாபம் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் லாபம் ஔவைக்குதான்.

பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.

பாலும் இனிமை. அதோடு கலந்த தேனும் இனிமை. உடன் சேர்ந்த பாகும் பருப்பும் இனிமை. இந்த இனிமைகளையெல்லாம் தருகின்றேன் இறைவா! இவைகள் அனைத்தையும் விட இனிமையான இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழை நீ எனக்கு அருள்வாயாக!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 19, 2007

04. இஇ - திருவிளையாடல்

திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால் நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் வணங்கித் துவக்குகிறார். நாம் இப்பொழுது பார்ப்பது பராசக்தி துதி.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்


இறைவன் பண்பு நலன்களை எப்படிச் சொல்லிக் கொண்டு போனாலும் சொற்கள் பத்தாது. ஆகையால் ஒரு பண்பை மட்டும் இங்கே சொல்கிறார். அண்டங்கள் எல்லாம் அணுவாக பெரிதாயினான். அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விரிசடைக்கடவுள். அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏனிப்படிச் சொல்ல வேண்டும்? அந்த விடையை அடுத்த வரியில் சொல்கிறார் பரஞ்சோதிமுனிகள். அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினான். அதாவது அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார். அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும். இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்கிறார் அருணகிரி. உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 07, 2007

03. இஇ - தண்டியும் கிழவியும்

தண்டியலங்காரத்தை இயற்றியவர் தண்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறார். இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரம் இருப்பது போலத் தெரியவில்லை.

தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல். இது செய்யுட்களின் இலக்கணத்தைப் பற்றி விளக்குகிறது. ஒரு காப்பியம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய இலக்கணம் என்ன? அந்தக் காப்பியத்தில் பயன்படுத்த வேண்டிய செய்யுட்களின் வகைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விளக்கும் நூல் தண்டியலங்காரம்.

இப்படிப்பட்ட நூலை யாரை வணங்கித் துவக்கியிருப்பார் தண்டியாசிரியர்?

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே


சொல்லின் கிழத்தியைப் புகழ்ந்து தனது இலக்கண நூலைத் துவக்குகிறார். சொல்லின் கிழத்தி என்றால்? கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி. இல்லக் கிழத்தி என்று இல்லத்தலைவியைச் சொல்கின்றோம் அல்லவா. திருமுருகாற்றுப்படையில் முருகனைக் "குறிஞ்சி மலைக் கிழவோனே" என்று நக்கீரரும் பாடியிருக்கிறார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். சொல்லின் கிழத்தி யார்? சொற்களுக்கெல்லாம் தலைவிதான் சொல்லின் கிழத்தி. கலைமகளைத் தொழுது தனது இலக்கண நூலைத் துவக்குகிறார்.

சொற்களின் நயத்தைப் பாருங்கள். சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடியாம். சொற்களின் தலைவியாகிய கலைமகளின் மெல்லிய திருவடிகள் என்று பொருள். அந்தத் திருவடியில் சிந்தை வைத்து இயம்புகிறார் தண்டி. எதை இயம்புகிறார்? செய்யுட் கணியை!

செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். அதாவது இலக்கணம். ஒரு நூலைப் படைக்க வேண்டிய செய்யுட்களைச் செய்யும் இலக்கணங்களை சொல்லின் கிழத்தியின் மெல்லியல் இணையடியில் சிந்தை வைத்துத் துவக்குகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 29, 2007

02. இஇ - புகழேந்தி யாருடைய புகழை ஏந்தி

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர் பாண்டி நாட்டுப் புலவர். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அவளோடு அறிவுருத்தும் ஆசானாய்ச் சோழநாடு புகுந்தவர். நளவெண்பா என்னும் பெயரிலிருந்தே இந்நூல் முழுக்க முழுக்க வெண்பாக்களால் ஆனது என்று விளங்கும். மேலும் நளவெண்பா உவமை அழகும் மிகுந்த நூல். அந்த நூலை எழுதுகையில் சைவராகிய புகழேந்தி யாருடைய புகழினை ஏந்தித் தொடங்குகிறார்?

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட்கு இறை

மகாபாரதத்தின் கிளைக்கதையாக வரும் நளதமயந்திக் கதையை நூலில் வடிக்கும் பொழுது திருமாலைத் தொழுது துவக்குகிறார் புகழேந்தி. திருமாலைத் தொழுகின்றவர்கள் அவரே ஆதியென்று தொழுவார்கள். ஆகையினாலே நூலின் ஆதியிலேயே ஆதித் தனிக்கோலம் ஆனான் என்று திருமாலைப் புகழ்கிறார். தனிக் கோலம் என்பது தனியாக அமர்ந்திருப்பது அல்ல. தனக்கு இணையாக எவரும் இல்லாதிருப்பது. "தனியானை சகோதரனே" என்று கந்தரநுபூதியில் அருணகிரி சொல்வதும் இதே தனிமைதான்.

அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் என்று ஒரு கதையைச் சொல்கிறார் புகழேந்தி. இறைவன் அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளே இருப்பவன் என்பதை அறியாதவன் இரண்யன். அவனுக்குப் பாடம் சொன்னன் ஒருவன். அதுவும் அவன் பெற்ற மகன். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற தனது மகனின் கூற்றை ஏற்க முடியாமல் திணறினான். தூணிலும் இருப்பானவன் துரும்பிலும் இருப்பான் என்று மகன் கூறவும் ஆணவம் கொண்டு தூணைத் தகர்த்தான் இரண்யன். அந்தத் தூணிலிருந்து மனித ஏறாக வந்தார் இறைவன். அந்த நிகழ்ச்சியைத்தான் தூணில் தோன்றினான் என்று நினைவு கூறுகிறார்.

அனைத்து வேதத்திற்கும் முன்னின்ற அவனை ஒரு வேழம் அழைத்தது. இறையறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் செடிகொடிகளுக்கும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அப்படி இறையறிவுள்ள ஆனை ஒன்று தாமரை மலரைக் கொய்ய ஆற்றில் இறங்கியது. அங்கிருந்த முதலையானது பசி கொண்டு ஆனையின் காலைக் கவ்வியது. அப்பொழுது ஆதிமூலமே என்று ஆனை நம்பி அழைத்ததால் என்னென்று கேட்டு ஓடி வந்து காத்தார் திருமால்.

ஆதித்தனிக்கோலம் ஆனானவனும், அடியவன் சிறுவனுக்காகத் தூணில் மனித ஏறாகத் தோன்றியவனும், வேதத்திற்கெல்லாம் முன்னிற்பவனும், ஆதிமூலமே என்று அழைத்த மாத்திரத்தில் என்னவென்று கேட்டவனுமாகிய திருமாலே எங்களுக்கு இறைவன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 24, 2007

01. இலக்கியத்தில் இறை - குறுந்தொகை

பைந்தமிழ் இலக்கியங்கள் படிக்கத் திகட்டாதவை. அந்தத் தீஞ்சுவைத் தமிழ் மாலைகளில் தேன் துளியாக இறைவணக்கப் பாடல்கள் நிறைந்து சிறந்துள்ளன. இறைவனைத் தமிழால் அழகு மிகும் சொற்களால் அன்பால் புனைந்த அந்த இறைவணக்கப் பாக்களைப் பூக்களைத் தேடும் வண்டாய்த் தேடித் தேடி செந்தமிழ்த்தேன் துளிகளைச் சேகரித்துப் படைப்பதில் உவப்படைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு இறைவன் அருளால் அப்பாக்களுக்குத் தப்பாத வகையில் பொருளுரைக்கிறேன். இலக்கியத்தில் இறை நம் தமிழ்ப் பசிக்கு இரை.

குறுந்தொகை

குறுந்தொகை என்னும் நூல் அகப்பாடல்களின் தொகுப்பு. பல புலவர்கள் படைத்த தனிப்பாடல்களின் தொகுப்பு. இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏமவைகல் எய்தின்றால் உலகே

தமிழ்க் கடவுள் முருகனைப் பாடிய இறைவணக்கப் பாடல் இது. மூத்தகுடியாம் தமிழ்க் குடியில் மூத்த தெய்வம் முருகனைப் பாடாதார் யார்? தன் பங்கிற்குப் பெருந்தேவனார் இந்தப் பாடலில் முருகன் அருளால் உலகின் காக்கப்படுவதைச் சொல்கின்றார்.

தொடக்கத்திலேயே திருவடியைப் பற்றிச் சொல்கின்றார். "பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்பது வள்ளுவன் வாக்கு. இறைவனடியைச் சேர வேண்டும். ஆகையால் முருகப் பெருமானின் திருவடியைப் புகழ்ந்து செய்யுளைத் துவக்குகிறார் பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று கந்தனடிகளைச் சொல்கின்றார். தாமரை மலர்களை ஒத்த அழகனுடைய திருவடிகள் என்று பொருள். திருப்புகழில் அருணகிரிநாதரும் "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே" என்று முருகன் திருவடிகளைப் புகழ்கிறார்.

பவழத்தன்ன மேனி. பவழம் செக்கச் சிவந்தது. முருகப் பெருமானி திருமேனியும் சிவந்தது. இங்கே சிவப்பு என்பது செம்மை என்னும் பண்பைக் குறிக்கும். முருகனுடைய மேனி மட்டுமா செம்மை. உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை! அது சிவனுக்கு உரியதாயிற்றே என்று எண்ணாதீர்கள். உடுக்கை என்பது உடுத்தும் துணியைக் குறிக்கும். "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற குறளையும் நினைவிற் கொள்க.

குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் என்று முருகனுடைய திருக்கை வேலின் சிறப்பைச் சொல்கிறார். மாயை என்பது இருள். ஞானம் என்பது ஒளி. இருள் அனைத்தையும் மறைக்கும். ஆனால் ஒளி வந்ததுமே இருள் விலகும். மாயையின் வடிவாக எழுந்து அனைத்தையும் மறைத்தது கிரவுஞ்ச மலை. வேல் ஞானத்தின் வடிவம். வேலெறிந்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் முருகன். ஞானம் அல்லது அறிவு சுடர் விட்டு ஒளிர வேண்டும். ஆகையால்தான் "அஞ்சுடர் நெடுவேல்" என்று பெருமதிப்போடு கூறுகின்றார். "கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே" என்று இதே கருத்தை கந்தரநுபூதியும் பகர்கிறது.

ஏமவைகல் என்றால் பாதுகாப்பான நிலை என்று பொருள். இது பழந்தமிழ்ச் சொல். பாதுகாப்பான நிலையை உலகம் எய்தியதாம். எதனால்? சேவலங் கொடியன் காப்ப. தாமரைத் திருவருடிகளையுடைய அழகனும், செம்மைப் பண்புடைய செவ்வேளும், மாயையைச் சாடும் சுடர்வேலைப் படித்தவனும், சேவற்கொடியைக் கொண்டவனுமாகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது பெருந்தேவனார் கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 29, 2007

52. கடைக்குட்டி

கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தான் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!

அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.

கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் துறவியாக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.

வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனாரோ முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு வந்த சமயக்குரவர்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னால் மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.

அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.

மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.

அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் திருப்புகழில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.

முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்

இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"

பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"

தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.

புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".

தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது. முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 22, 2007

51. அரவாடினாலும் அறவாடினாலும்

அநுபூதி என்றால் என்னவென்று சொல்லியாகி விட்டது. அநுபூதியின் அருமை பெருமைகளைச் சொல்லியாகி விட்டது. அநுபூதியின் தன்மைகளையும் திண்மைகளையும் முடிந்த வரை சொல்லியாகி விட்டது. அநுபூதியை அடையும் வழிமுறைகளையும் சொல்லியாகி விட்டது. கந்தரநுபூதி பற்றிய நூலை முடிக்க வேண்டும். முடிக்கும் பொழுது முருகனைப் பாடித்தான் முடிக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னால் ஒரு வேலை இருக்கிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பது பாடல்களைப் பாடி விட்டார் அருணகிரி. இந்தக் கந்தரநுபூதியைப் படித்தால் என்ன பயன் கிடைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டுமல்லவா. ஒரு பொருளை விற்கும் பொழுது என்ன பயன்கள் என்று சொல்லித்தானே விற்பார்கள். அதுதானே விற்பனை முறை.

ஆனால் அருணகிரி முருகனருளை விற்க விரும்பவில்லை. மக்கள் கற்க விரும்புகிறார். ஆகையால் நமக்காக வேண்டிக் கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதுதான் இந்தப் பாடல். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. தலைவர்கள் விடுதலை கேட்டார்கள். அவர்கள் கேட்டது அவர்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்தானே! அந்த பொதுவுள்ளம் வாய்ந்தவர் அருணகிரி. நமக்காகத் தன் மீதும் குற்றத்தை ஏற்றிக் கொண்டு பாடுகிறார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே


மதி கெட்டால் அறவாடும். அறவு என்றால் ஆற்றல். ஆற்றல் வாடுதலே அறவாடல். அரவு என்றால் பாம்பு. அரவு ஆடும். நம்முன்னே அரவாடினாலும் அறவாடினாலும் முடிவு துன்பந்தான். எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது. ஆற்றல் போனால் தூற்றல் வரும். ஆம். ஆற்றல் இழந்தவனை உலகம் தூற்றும்.

ஆற்றலோடு இருந்தவரையில் இராவணனை எல்லா உலகமும் தொழுதது. பதவியில் இருப்பவர் காலில் விழும் வழக்கம் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவன் ஆற்றல் இழந்து போர்க்களத்தில் வெறுங்கையோடு நின்ற பொழுது "இன்று போய் நாளை வா" என்று ராமன் சொன்னது கருணையென்றாலும் ஒரு வகையில் தூற்றலே. அதனால்தான் அப்படிச் சொன்னதற்கு ராமனுக்குப் பெருமை சூழ்ந்தாலும் இராவணனுக்கு அவமானம் சூழ்ந்தது. தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

அதனால்தான் அருணகிரி வேண்டுகிறார். மதிகெட்டு ஆற்றல் இழந்து மயங்கி அறக்கதி கெட்டு ஒழிவதோ! முருகா நீதான் காப்பாற்ற வேண்டும்.

அறம் என்பது மிகப் பெரிய சொல். "அறம் செய விரும்பு" என்கிறாள் ஔவை. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்கிறார் வள்ளுவர். அடுத்தர் சொல்லிக் காட்டும் நிலைக்கு ஆளாகக் கூடாது. நல்லது செய்கிறோம். அது அடுத்தவர் குற்றம் சாட்டும் நிலையில் இருக்கக் கூடாது. அறம் கெட்டால் எல்லாம் கெட்டு விடும். அதனால் தவறு செய்யக் கூடாது.

இதை இளங்கோவடிகள் கண்ணகி வாயால் சொல்கின்றார். தவறு செய்து விட்டோமெனத் தெரிந்ததும் பாண்டியன் உயிர் விட்டான். உடனே மாண்டாள் கோப்பெருந்தேவி. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாம்!" மற்றொரு இடத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்" என்கிறார் இளங்கோவடிகள். அறத்திலிருந்து தவறினால் அறமே கொன்று விடும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் மனதாற்கூடச் செய்யாதவன். ஒரு சின்ன தவறு செய்தான். விளைவு? மதுரையே அழிந்தது. அதை இன்றைக்கும் நாம் சொல்லுகிறோம். ஒரு சின்ன தவறு எத்தனை நூற்றாண்டுகளாக நிற்கிறது பாருங்கள். அவன் எத்தனையெத்தனையோ நல்லவைகளைச் செய்திருக்கிறான். அவற்றை யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவன் குற்றம் நின்கின்றது.

இந்த நிலைக்கெல்லாம் ஆளாக்காமல் காக்க வேண்டியது முருகனே! கங்கையின் மைந்தனே! ஞானத்தினால் உண்டாகும் சுகத்தின் அதிபனே! திதியின் வழியினரான அரக்கர்களின் செருக்கை அழிந்த சேவகனே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 15, 2007

50.தனிமையிலே இனிமை காண முடியுமா?

கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்வதும் எளிதன்று. முறையான கேள்விகளைக் கேட்பதும் கடினம் . அவற்றிற்குத் தெளிவாக விடை பகர்வதும் கடினம். இரண்டிற்குமே அறிவு தேவை. தமிழ்க் கடவுள் முருகன் கேட்கிறார். அதற்குத் தமிழ் மூதாட்டி ஔவை விடை சொல்கிறார்.

கேள்வி: இனியது எது?
விடை: இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!



நம்மிடம் இனியது கேட்டால், என்ன சொல்வோம்? இனிது இனிது மாம்பழம் இனிது. அதனினும் இனிது தேனிலூறிய மாங்கனி. அதனினும் இனிது அதோடு பாலைச் சேர்த்தல். அதனினும் இனிது அப்படிக் கலந்ததைத் திகட்டாமல் மூவேளையும் உண்பதுதானே!

ஆனால் ஔவை அறிவு நிறைந்த கிழவி. உண்மையிலேயே இனியவைகளை அடுக்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஏகாந்தம் இனிது என்கிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும் என்பதே ஆன்றோர் முடிவு.

தனிமை என்றால் யாருமில்லாத இடம் என்று மட்டும் பொருளல்ல. உடல் தனியாக இருப்பது தனிமையல்ல. மனம் தனியாக இருக்க வேண்டும். ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது. இன்பம், துன்பம், இருள், ஒளி, அமைதி, இரைச்சல்....எதுவுமே இல்லாதது. மனத்தை அந்த அளவிற்கு உயர்த்தினால் இன்பம் கிடைக்கும்.

அது எப்படி? எளிமையாகச் சொல்கிறேன். கவனியுங்கள். புகை வண்டியில் பகல் வேளைகளில் பயணம் போனவர்களுக்குத் தெரியும். எல்லாரும் விழித்துக் கொண்டிருப்பார்கள். சும்மாயிருக்க முடியாது. அதனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரே இரைச்சலாக இருக்கும். நடுநடுவே பழம் விற்கின்றவர்கள். பாட்டுப்பாடி யாசிப்பவர்கள். பலகாரங்கள், காப்பி , தேநீர் விற்பவர்கள். புத்தகங்களும் செய்தித்தாள்களும் விற்பவர்கள். எதற்கோ சண்டையிடுகின்றவர்கள். எத்தனை இரைச்சல். அத்தோடு இரயில் வண்டி வேறு. தடதடவென ஓடிக் கொண்டும் கூவெனக் கூவிக் கொண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு காது வலிக்கும்.

ஆனால் அத்தனை ஓசைகளிலும் ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவருடைய எண்ணம் முழுவதும் புத்தகத்திலேயே இருக்கும். எல்லாம் சுற்றி இருக்கிறது. ஆனால் அவர் தனிமையில் இருக்கிறார். இது தனிமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

ஆக உலக இயக்கத்தில் இருக்கும் எல்லாத் துன்பங்களையும் தாண்டி மனதை அமைதியாக தனியாக வைத்துக் கொண்டிருக்க முடியுமானால் அது எவ்வளவு பெரிய இன்பம். அதைத்தான் ஔவை ஏகாந்தம் இனிது என்கிறார். முருகன் அருள் முழுதும் பெற்ற கிழவி.

திருவாசகத்தில் கூட ஈசனைப் பற்றிச் சொல்லும் பொழுது "ஏகன் அனேகன்" என்றே சொல்கிறார் மாணிக்கவாசகர். ஏகன் - தனியாக இருப்பவன். அனேகன் - அனைத்திலும் இருப்பவன். என்ன விளக்கம் பாருங்கள்.

தன்னந் தனி நின்றது தான் அறிய
இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் கிளையும் கிருபை சூழ் சுடரே


அருணகிரிக்கு ஒரு பிரச்சனை. ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கும் வழிமுறையை அவருக்கு முருகன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இவரும் அனுபவித்திருக்கிறார். தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் சொல்லித் தர வேண்டுமென்பது அவரது விருப்பம். ஆனால் அதைச் சொல்லில் அடக்க முடியவில்லை. புலம்புகிறார். "தன்னந்தனி நின்றது தானறிய இன்னுமொருவர்க்கு இசைவிப்பதுவோ!" சொல்ல முடியுமா?

முருகனை "மின்னும் கதிர்வேல் விகிர்தா" என்று அழைக்கிறார். விகிர்தம் என்றால் வேறுபடுதல். விகிர்தா என்றால் வெவ்வேறு விதமாக இருப்பவன். ஒன்றும் பலவுமாய் இருப்பவனல்லவா அவன். அந்த கதிர்வேல் விகிர்தனின் பண்பு என்ன தெரியுமா? அதை நான்காவது அடியில் சொல்கிறார். "நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே!"

நினைக்கின்றவர்களின் துன்பத்தைத் துடைப்பவன் கந்தன். கின்னம் என்றால் துன்பம். கிண்ணம் என்றால் பாத்திரம். நமது வாழ்க்கை கின்னம் நிறைந்த கிண்ணமாகி விடக்கூடாது. முருகனை அன்போடு நினைத்தால் போதும். குழம்பு வைக்கின்றவர்களுக்குத் தெரியும். புளியை ஊற வைத்துக் கரைக்க வேண்டும். ஆனால் உப்பைச் சேர்த்தால் போதும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 08, 2007

49. அறிவு எத்தனை வகை

கந்தரநுபூதி எந்த அளவிற்கு உயர்ந்தது என்று சென்ற பாட்டில் (ஆறாறையும் நீத்து) பார்த்தோம். இந்தப் பாடலில் கந்தரநுபுதியின் தன்மையைச் சொல்கிறார் அருணகிரி. தன்மை முழுமையும் சொல்ல முடியாது. அதன் தொடக்கத்தைச் சொல்கிறார்.

கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம். நான்கு பக்கங்களிலும் கடலைப் பார்க்கலாம். கடலைப் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் உண்மையில் முழுக்கடலையும் பார்க்க முடியுமா?

இரண்டு கண்கள் அதற்குப் பத்தாது. அது போலத்தான் கந்தரநுபூதியும். கந்தரநுபூதியின் முழுப் பெருமையையும் நம்மால் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. உணர்ந்து புரிந்து கொள்ளலாம்.

கடலின் ஒரு பகுதியை நம் கண்களுக்குக் காட்டுவது போல அநுபூதியின் அறிமுகத்தைக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே


"செறிவொன்று அற வந்து இருளே சிதைய" - செறிவு என்றால் நம்மைச் சுற்றியிருந்து நம்மைச் செறிவூட்டுகின்றவை. சுருங்கச் சொன்னால் "என்னுடையது" என்று நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அவையெல்லாம்.

இந்தச் செறிவை அற்றுப் போகச் செய்வது அநுபூதி. இதென்ன கூத்து? எதற்காக இவையெல்லாம் போக வேண்டும்? வள்ளுவரைக் கேட்கலாம்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
"
எவற்றையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அவைகளால் துன்பம் உண்டாகாது. புகைப் பிடித்தலை விட்டால் நுரையீரல் தப்பிக்கும்.

எந்தப் பொருளையும் பழக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விலகினால் அதனால் நமக்குத் துன்பம் நேராது. கிருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு தாளை எடுத்து நம்முடையது என்று நினைப்பவைகளைப் பட்டியலிட்டால், அந்தப் பட்டியலின் நீளமே நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம்.

இதைத்தான் அநுபூதியும் சொல்கிறது. சற்றே வேறுவிதமாக. கடவளோடு ஒன்றாகி விட்டால் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒன்றுமில்லை. புரிகின்றதா "செறிவொன்று அறவந்து"?

இப்படிச் செறிவு அற்றுப் போவதால் உண்டாகும் நன்மை என்ன? "இருளே சிதைய" என்கிறார். ஆணவமாகிய இருள் சிதைந்து போகும். ஆணவம் ஆளை அழித்து விடும். ஆனால் ஆணவத்தை முருகனருள் அழித்து விடும். (இது வரைக்கும் மூன்றாவது வரிக்கு மட்டும்தான் விளக்கம் பார்த்திருக்கின்றோம். இன்னும் மூன்று வரிகள் உள்ளன.)

ஆணவம் அழிந்த நிலை என்ன? "வெறி வென்றவர்" என்ற நிலையை எய்துவது. பற்று என்பது எதன் மேலும் இருக்கும். அது அன்பின் முதல் நிலை. பாசம் என்றும் சொல்லலாம். அது தவறாகாது. அந்தப் பாசமே அளவிற்கு மீறினால் வெறியாகி விடும். வெறி நன்றன்று.

மத வெறி, மொழி வெறி, இன வெறி, சாதி வெறி என்று எந்த வெறியும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்றுதான் இருக்கலாம். அதிலும் வெறி இருக்கக் கூடாது. அதனால்தான் வள்ளுவரும் "பற்றுக பற்றற்றான் பற்றை" என்று சொல்கிறார். பெரிய அறிஞர்கள் ஒன்றைச் சொன்னால் அதில் ஒவ்வொரு சொல்லையும் மிகக் கவனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆழ்ந்து பொருள் கொண்டால் தெளிவாகப் புரியும்.

அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார். இறைவன் மேலும் பற்றுதான் இருக்க வேண்டும். வெறி இருக்கக் கூடாது.

அறிவு எத்தனை வகைப்படும்? பட்டறிவு, பகுத்தறிவு, கேள்வி ஞானம் மற்றும் படிப்பறிவு.

எதையும் படித்துத் தெரிந்து கொள்வது படிப்பறிவு. கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே இது கிட்டும். நல்ல அறிஞர்கள் சொல்லியதைக் கேட்டு உணர்ந்து கொள்வது கேள்வியறிவு. இது நல்ல அறிஞர் மொழி கேட்டால் மட்டுமே கிடைக்கும். எதையும் பட்டுத் தெரிந்து கொள்வது பட்டறிவு. இது அநுபவத்தில் வருவது. அனைத்தையும் அநுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்கள் பிரசவ வேதனையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. பகுத்தறிவு என்பது இருக்கின்ற அறிவை வைத்து மற்றொன்றைப் பகுத்துத் தெரிந்து கொள்வது. இதுவும் ஒரு எல்லைக்குள் உட்பட்டதே.

ஆகக் கூடி எந்த அறிவுமே முழுமையானது அல்ல. இந்த அறிவுகளெல்லாம் சீவ அறிவுகள். சீவனாக உலகில் வாழத் தேவையான அறிவுகள். சீவ அறிவை விட சிவ அறிவு சிறந்தது. சீவனாகப் பிறந்தவர்களுக்குத் தலையில் சுழியுண்டு. பிறப்பேயில்லாத சிவனுக்குக் கிடையாது. தலையிலுள்ள சுழி போனால் சீவன் சிவனாகி விடும்.

சீவன் சிவனாக வேண்டுமானால் சீவ அறிவு போக வேண்டும். சிவஞானம் பெருக வேண்டும். அதைத்தான் "அறிவொன்று அற நின்று" என்கிறார் முதலடியில். அறிவொன்று அற நின்று சிவனை அறிகின்றவர்கள் அறிவில் என்றைக்கும் பிரியாமல் இருப்பான் முருகன். முதலிரண்டு அடிகளையும் மீண்டும் படியுங்கள்.
"அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவொன்று அற நின்ற பிரான் அலையோ
"

பிரான் என்பது பிரியான் என்பதன் சுருக்கம். முருகப் பெருமான் நம்மையேல்லாம் பிரியாமல் காப்பவன்.

பக்தியுடன்,
கோ.இராகவன்